இந்தியாவின் உணவு உற்பத்தி 376 மில்லியன் டன்களை எட்டியுள்ளதாகவும் வேளாண் துறையின் வளர்ச்சி 4.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும் மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் மாநாட்டில், தொடக்கநாள் அமர்வில் உரையாற்றிய அமைச்சர், சிறு விவசாயிகளின் மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சர்வதேச வேளாண் ஒத்துழைப்பிற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா உயர் முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறினார்.
உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக கருதும் வசுதைவ குடும்பகம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலக அளவில் அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான கொள்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக போர் புரிவதற்கு மாறாக அமைதி ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்களில் உலக நாடுகள் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இத்தகைய கொள்கைகள் எதிர்காலத்தில் வலுவான பயனுள்ள வேளாண் ஒத்துழைப்புக்கு அடித்தளமாக அமையும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். சிறு, குறு, விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறிப்பாக பருவநிலை மாற்றம் இயற்கை வளங்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வரும் வேளாண் இடுபொருள்களுக்கான செலவுகள் வேளாண் சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழல் போன்ற சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான தளமாக இந்த மாநாடு அமைந்துள்ளதாக திரு சிவ்ராஜ் சிங் சௌகான் கூறினார்.
திவாஹர்
