பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஒடிசாவில் ராமேஷ்வரிலிருந்து பாரதீப் வரை புதிய கடலோர நெடுஞ்சாலை அமைப்பதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது இரண்டு தொகுப்புகளின் கீழ், அரசு தனியார் கூட்டாண்மை மாதிரியில் அமைக்கப்படுகிறது. இதன் மொத்த நீளம் 160.18 கிலோ மீட்டர், இதற்கான மொத்த மூலதனச் செலவு ரூ.8300.79 கோடி ஆகும்.
ராமேஷ்வரிலிருந்து பாரதீப் வரையிலான புதிய கடலோர நெடுஞ்சாலையின் திட்டப் பகுதி, ஒடிசாவின் குர்தா, பூரி, கேந்திரபடா, ஜகத்சிங்பூர் மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படுகிறது. தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை-16 சாலை கட்டமைப்பு, தங்க நாற்கர சாலையின் ஒரு பகுதியாக இருப்பதுடன், ஏற்கனவே குர்தா, புவனேஸ்வர், கட்டாக் போன்ற முக்கிய நகரங்கள் வழியாகச் செல்லும் 6 வழிச் சாலையாகவும் உள்ளது. தற்போதுள்ள தேசிய நெடுஞ்காலை-316, புவனேஸ்வர்–பூரியை இணைத்து, மேலும் சதாபடா, கோனார்க் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பூரி–சதாபடா, பூரி–கோனார்க் வழித்தடங்களில் தற்போதுள்ள சாலை பழுதடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் சுமார் 40% பகுதி சாலை புனரமைப்பு மட்டுமே செய்யப்பட்டிருப்பதாலும், சாலையில் அதிக அளவில் உள்ளூர் பயணிகள் போக்குவரத்து இருப்பதாலும், இந்த வழித்தடம் சீரான நீண்ட தூர வாகனப் போக்குவரத்திற்குப் பொருத்தமற்றதாக உள்ளது.
இத்திட்டங்கள் முழுமையாக நிறைவடையும்போது, ராமேஷ்வர் மற்றும் பாரதீப் இடையிலான பயண நேரம் சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பிரபாகரன்
