அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், 31 மே 2026 அன்று இந்திய கடற்படையின் 27-வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். 41 ஆண்டுகள் சிறப்பான சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்ற அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதிக்குப் பதிலாக இவர் இந்தப் பதவியை வகிப்பார்.
அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் 01 ஜூலை 1987 அன்று இந்திய கடற்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர் நிபுணரான இவர், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக நீடித்த தனது சிறப்பான பணிக்காலத்தில், பல்வேறு செயல்பாட்டு, பணியாளர் மற்றும் பயிற்சிப் பதவிகளை வகித்துள்ளார். அட்மிரல் சுவாமிநாதனின் கடற்படை பணியில், ஐ.என்.எஸ் வித்யுத் மற்றும் ஐ.என்.எஸ் வினாஷ் ஆகிய ஏவுகணைக் கப்பல்கள், ஐ.என்.எஸ் குலிஷ் என்ற ஏவுகணைப் போர்க்கப்பல், ஐ.என்.எஸ் மைசூர் என்ற ஏவுகணைத் தகர்ப்புக் கப்பல் மற்றும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கிக் கப்பல் ஆகியவற்றில் பணியாற்றுவது அடங்கும்.
ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டபோது, அவர் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தில் தலைமைப் பணியாளர் அதிகாரியாக (பயிற்சி) பணியாற்றினார்.
வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டபோது, அவர் மேற்குக் கடற்படை கமாண்டின் தலைமைப் பணியாளர்; மற்றும் கடற்படைத் தலைமையகத்தில் பணியாளர் சேவைகள் கட்டுப்பாட்டாளர், பணியாளர் தலைவர் மற்றும் கடற்படைத் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அட்மிரல் சுவாமிநாதன் புகழ்பெற்ற மேற்கு கடற்படை கமாண்டின் தலைமைத் தளபதியாக இருந்தார்.
அவர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி; பிரிட்டனில் உள்ள ஸ்ரீவென்ஹாமில் உள்ள கூட்டுச் சேவைகள் கமாண்டிங் மற்றும் பணியாளர் கல்லூரி; கரஞ்சாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரி; மற்றும் ரோட் தீவின் நியூபோர்ட்டில் உள்ள ஐக்கிய அமெரிக்க கடற்படைப் போர்க் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். அவரது கல்வித் தகுதிகளில் புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெற்ற இளநிலை அறிவியல் பட்டமும் , கொச்சியில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பெற்ற தொலைத்தொடர்பு முதுநிலை அறிவியல் பட்டமும் அடங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்பு ஆய்வியலில் முதுகலை பட்டம்; மும்பை பல்கலைக்கழகத்தில் உத்திசார் ஆய்வியலில் எம்ஃபில் பட்டம்; மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு ஆய்வியலில் முனைவர் பட்டம் ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.
அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், தனது சிறப்பான சேவைக்காக ‘பரம விசிஷ்ட சேவா பதக்கம்’, ‘அதி விசிஷ்ட சேவா பதக்கம்’ மற்றும் ‘விசிஷ்ட சேவா பதக்கம்’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
திவாஹர்
