குஜராத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடினார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று (29.05.2026) குஜராத்தின் புஜ் நகரில் இரண்டு எல்லைச் சாவடிகளைத் திறந்து வைத்து, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி, மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மிகவும் கடுமையான பருவநிலை, கடினமான புவியியல் சூழ்நிலைகளில் பணியாற்றுவதைக் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த இடத்திற்கு வந்து, அவர்கள் புன்னகை முகத்துடன் இந்தியாவின் எல்லைகளில் காவல் காப்பதாக அவர் கூறினார். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களே சோர்வடையவில்லை எனும்போது, நாம் சோர்வடைவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் கூறினார்.

எல்லைப் பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 60 ஆண்டுகளில், நாட்டின் மிகவும் சவாலான இரண்டு எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த எல்லைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வீரர்கள், -45 டிகிரி முதல் +45 டிகிரி வரையிலான வெப்பநிலையைத் தாங்கிக்கொண்டு, அனைத்து விதமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்தப் படை கடந்த அறுபது ஆண்டுகளில் தனது பொறுப்பை பாராட்டத்தக்க வகையில் நிறைவேற்றியுள்ளது என்று திரு அமித் ஷா மேலும் கூறினார்.

எல்லைப் பாதுகாப்புப் படைக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார். மேற்கு வங்க எல்லையில் முழுமையடையாத வேலி அமைப்பதே நமது பாதுகாப்பு அமைப்பில் உள்ள மிகப்பெரிய இடைவெளியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். புவியியல் நிலைமைகளை மாற்ற முடியாது என்றாலும், எல்லை வேலி அமைக்க முடிந்த பகுதிகளில்கூட, நிலம் கையகப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், சமீபத்தில் மேற்கு வங்க மக்களின் ஆசீர்வாதத்துடன், அமைந்த புதிய அரசு, பதவியேற்ற ஒரு வாரத்திற்குள், எல்லை வேலி அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்ய கொள்கை ரீதியாக முடிவு எடுத்துள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார். வேலி அமைக்கும் பணி முடிந்தவுடன், ஊடுருவலைத் தடுப்பதில் நாம் வெற்றி பெறுவோம் என்று அவர் உறுதிபடக் கூறினார்.  எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் வீரம், தைரியம், கடமையின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நாட்டின் முழு எல்லையும் பாதுகாக்கப்படுவதாக திரு அமித் ஷா தெரிவித்தார்.

Leave a Reply