2024-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) பயிற்சி அதிகாரிகளுடன் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் கலந்துரையாடினார். அப்போது, 2024-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரிகளில் பெண்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் 41 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது சமகால இந்தியாவில் குடிமைப் பணிகளில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அரசின் உதவிச் செயலாளர் திட்டத்தின் கீழ், 2024 பிரிவைச் சேர்ந்த 184 இளம் ஐஏஎஸ் அதிகாரிகள், மத்திய அரசின் 49 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மே 4 முதல் ஜூன் 25 வரை எட்டு வார காலக் கொள்கை உருவாக்கப் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளனர். இதில் 78 அதிகாரிகள் பொறியியல் பின்னணியில் இருந்தும், மற்றவர்கள் மருத்துவம், சட்டம் மற்றும் மானுடவியல் துறைகளில் இருந்தும் தேர்வாகியுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த இளம் அதிகாரிகள் தங்கள் வாழ்க்கையின் உச்சத்தில், அதாவது 2047-ல் இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது நாட்டின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பார்கள் என்று அமைச்சர் கூறினார். ‘அதிக நிர்வாகம், குறைந்தபட்ச அரசாங்கம்’ என்ற பிரதமரின் கொள்கையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தங்களை மேம்படுத்திக்கொண்டு, அர்ப்பணிப்புடனும் கருணையுடனும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா
