மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மேதகு டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபியுடன் காணொளி வாயிலாக உரையாடினார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், சவூதி அரேபியாவின் வர்த்தக அமைச்சர் மேதகு டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபியுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாடினார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம், பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்று திரு கோயல் நம்பிக்கை தெரிவித்தார். அதிகரித்த இடையூறுகள் மற்றும் நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும், விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையைப் பேணுவதில் உறுதியாக இருக்கும் சவூதி மக்களின் அசைக்க முடியாத மன உறுதியை அவர் பாராட்டினார். தற்போதைய மோதலின் போது நாட்டில் நடந்த தாக்குதல்களை அவர் கண்டித்ததோடு, இந்திய சமூகத்தைப் பாதுகாக்க சவூதி அரேபியா மேற்கொண்ட முயற்சிகளையும் பாராட்டினார்.

மோதல் பிராந்திய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை இரு தரப்பினரும் குறிப்பிட்டதோடு, சுமூகமான வர்த்தகப் பரிமாற்றங்களை உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் விரைவாக மீள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். சவூதி அரேபியா மற்றும் வளைகுடா பிராந்தியத்திற்கான ஏற்றுமதிகளை ஆதரிக்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை திரு. கோயல் எடுத்துரைத்தார்.

இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்தியதோடு, இந்தியா-ஜிசிசி தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்தியா-சவுதி அரேபியா பொருளாதாரக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு வலியுறுத்தியது.

Leave a Reply