அரசியலுக்கு அப்பாற்பட்டு நேர்மையுடன் மக்களுக்கு சேவை செய்யுமாறு சட்டமன்ற உறுப்பினர்களை மக்களவை சபாநாயகர் வலியுறுத்தினார்.

மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா இன்று, சட்டமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் விடாமுயற்சியுடனும் நேர்மையுடனும் நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை உறுதியான செயல்களாக மாற்றுவதற்கும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பதிலளிக்கக்கூடிய ஆட்சியை உறுதி செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். குடிமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு தொலைநோக்குப் பார்வை , அர்ப்பணிப்பு மற்றும் பொது நலனுக்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை தேவைப்படுகின்றன என்றும், இவை ஒரு வளர்ந்த, சமத்துவமான மற்றும் தன்னிறைவு பெற்ற தேசத்தை உருவாக்குவதற்கு அவசியமான குணங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இங்கு நடைபெற்ற முதல் சிபிஏ இந்தியா மண்டலம் VII மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியபோது திரு பிர்லா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் குறித்துப் பேசிய திரு. பிர்லா, 2047-ஆம் ஆண்டுக்குள் ‘விக்ஷித் பாரத்’ (வளர்ச்சிமிக்க இந்தியா) என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் அவர்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். வளர்ந்து வரும் தலைவர்களாக, புதுமையான கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது, மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவது ஆகிய பொறுப்புகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அவர் வலியுறுத்தினார். அவர்களின் ஆற்றல், தொலைநோக்குப் பார்வை, மற்றும் பொது நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை, வளமான, தன்னிறைவு பெற்ற, மற்றும் சமத்துவமான இந்தியாவைக் கட்டமைப்பதிலும், வரும் தலைமுறையினருக்கு நிலையான வளர்ச்சியையும் சமூக முன்னேற்றத்தையும் உறுதி செய்வதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பங்கை ஆற்ற முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தேசத்தைக் கட்டமைப்பதில் சட்டமன்ற அமைப்புகளின் மாறிவரும் பங்கு குறித்த தனது பார்வைகளைப் பகிர்ந்துகொண்ட திரு. பிர்லா, பொது நலனையும் நல்லாட்சியையும் மேம்படுத்துவதில் மாநில சட்டமன்றங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்ற ஜனநாயகம் உலகளவில் சிறந்த ஆட்சி முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், 1952 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் வருகை சீராக அதிகரித்து வருவது, ஒரு துடிப்பான ஜனநாயக நாடாக இந்தியாவின் நீடித்த வெற்றியைப் பிரதிபலிக்கிறது என்றும் எடுத்துரைத்தார் .

Leave a Reply