காண்ட்லாவில் முக்கிய துறைமுக இணைப்புத் திட்டத்திற்கு ₹132.51 கோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் , தீன்தயாள் துறைமுக ஆணையகத்தில் உள்ள LC-235 என்ற இடத்தில் சாலை மேம்பாலம் (ROB) கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ₹132.51 கோடி ஆகும்.

இந்தத் திட்டம், இந்திய அரசின் முதன்மைத் திட்டமான சாகர்மாலா திட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதுடன், நாடு முழுவதும் பல்முனைப் போக்குவரத்து இணைப்பையும் தளவாடத் திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரதமர் கதி சக்தி தேசிய பெருந்திட்டத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது. இதன் கட்டுமானப் பணிகள் தற்போது மேற்கு ரயில்வேயால் முன்பண அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் , “பிரதமர் நரேந்திர மோடிஜியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், நவீன, திறமையான மற்றும் தடையற்ற துறைமுக அடிப்படையிலான இணைப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது. தீனதயாள் துறைமுகத்தில் உள்ள மேம்பாலம், முக்கியத் தடைகளை நீக்கி, சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தி, இந்தியாவின் தளவாடத் திறனை வலுப்படுத்தும். சாகர்மாலா திட்டம் மற்றும் பிரதமர் கதி சக்தி ஆகியவற்றுடன் இணைந்து, வர்த்தகத்தை விரைவுபடுத்தி, பாதுகாப்பை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம். உலகத் தரம் வாய்ந்த துறைமுக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், உலகளாவிய கடல்சார் மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு தீர்க்கமான படியாகும்” என்றார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், பிரதிநிதித்துவ முதலீட்டு வாரியத்தால் (DIB) இந்த முன்மொழிவு சமீபத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது. நவீன பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, திட்டத்தின் திருத்தப்பட்ட செலவு ஆய்வு செய்யப்பட்டது.

முன்மொழியப்பட்ட இந்த ரயில்வே மேம்பாலம், துறைமுகத்தில் தற்போதுள்ள தளவாடத் தடைகளைச் சமாளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டமாகும். இந்த ரயில்வே மேம்பாலத்தின் குறுக்கே தடையற்ற போக்குவரத்தை சாத்தியமாக்குவதன் மூலம், இத்திட்டம் போக்குவரத்து நெரிசல்களை நீக்கி, துறைமுகத்தை நோக்கிய சரக்குகளின் தடையற்ற ஓட்டத்தை உறுதிசெய்து, தீன்தயாள் துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக மேம்படுத்தும். இது நிறைவடைந்ததும், நெரிசலைக் குறைத்து, சரக்குகளை விரைவாக வெளியேற்ற வழிவகுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கடல்சார் தளவாடச் சங்கிலியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த மற்றும் ஒத்திசைவான உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க , அனைத்து முக்கிய துறைமுகங்களும் தங்களது திட்டங்களை பிஎம் கதி சக்தி இணையதளத்தில் பட்டியலிடுமாறு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு, பல்முனை இணைப்புத் திட்டங்களைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும், முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், நாடு முழுவதும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுபடுத்தவும் உதவும்.

Leave a Reply