இலங்கை அரசாங்கத்தின் பதில்களில் எமக்குத் திருப்தி இல்லை என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த மற்றும் கைதாகியவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அளித்துள்ள பதில்கள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அந்த அமைப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பிலால் அரசாங்கம் கூறியுள்ள ஆரம்பபதில் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறான அறிக்கைகளின் மூலம் புகலிடக் கோரிக்கை பெற்றுக் கொள்வதற்கு வழி கோலும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளதாகவும், அவர் மருத்துவ மற்றும் வீடியோ ஆதாரங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் இருந்தால் அது குறித்து காவல்துறையிடம் முறைப்பாடு செய்ய முடியும் இராணுவத்தினர் பதிலளித்துள்ளதாகவும், இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை காவல்துறையினர் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை, இறுதிக்கட்ட யுத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட எவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை. அவ்வாறு இராணுவத்தினர் நடந்து கொள்ளவும் மாட்டார்கள் என இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றை அடியோடு மறுத்திருந்தது.
அத்துடன் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையும் வீடியோ காட்சிகளும் போலியானவை என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் ஹெகலிக ரம்புக்வெல அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.