பசுமை ஹைட்ரஜன் மற்றும் எரிசக்தி உற்பத்தி திட்டங்களை அதிகரிக்க இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகம் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் காந்திநகரில் உள்ள குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரில் ஓர் அலுவலகத்தைத் திறந்துள்ளது. இது பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கான நிதிச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும். 2024, ஏப்ரல் 17 அன்று அபுதாபியில் நடைபெற்ற உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு 2024-ல் நடைபெற்ற “நீண்ட கால எரிசக்தி சேமிப்புக்கான எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள்” என்ற குழு விவாதத்தின் போது இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி ஆணைய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு பிரதீப் குமார் தாஸ், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய நாட்டின் பயணத்திற்கு பங்களிக்கும் முன்முயற்சியை எடுத்துரைத்தார்.

2030-ம் ஆண்டுக்குள், ஆண்டிற்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன் உற்பத்தி என்ற தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் லட்சிய இலக்கை அடைவதில் எரிசக்தி சேமிப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேம்பட்ட சேமிப்பு தொழில்நுட்பங்களுக்கான பல முக்கிய முன்னுரிமைகளை அவர் எடுத்துரைத்தார்.

செலவைக் குறைப்பதற்கும், எரிசக்தி சேமிப்பு தீர்வுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதை அடைவதற்கு, விநியோகச் சங்கிலி வலையமைப்பை வலுப்படுத்தும் கொள்கைகளை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசினார். போட்டி மற்றும் பொருத்தமான நிதித் தீர்வுகளை வழங்குவது எரிசக்தி சேமிப்புத் திட்டங்களில் முதலீட்டை ஊக்குவிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

திவாஹர்

Leave a Reply