தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த செயலி மூலம் இதுவரை 79,000 க்கும் அதிகமான விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளன; 99 சதவீத வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன .

இந்திய தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் சுட்டிக்காட்ட மக்களின் கைகளில் ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது. 2024 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை 79,000 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன. 99% க்கும் அதிகமான புகார்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன.இவற்றில் 89% 100 நிமிடங்களுக்குள் பைசல் செய்யப்பட்டன. வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மை   சி-விஜில் பயன்பாட்டின் முக்கிய அம்சங்கள்.

58,500 க்கும் அதிகமான புகார்கள் (மொத்தத்தில் 73%) சட்டவிரோத விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ளன. பணம், அன்பளிப்பு மற்றும் மதுபான விநியோகம் தொடர்பாக  1400க்கும் அதிகமான புகார்கள் வரப்பெற்றன. 3% புகார்கள் (2454) சொத்துக்களை சேதப்படுத்துவது தொடர்பானவை. துப்பாக்கிகளைக் காட்டுதல், மிரட்டுதல் தொடர்பாக பெறப்பட்ட 535 புகார்களில் 529 புகார்களுக்குத்  தீர்வு காணப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது உட்பட தடைசெய்யப்பட்ட காலத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்ததாக 1000 புகார்கள் பதிவாகியுள்ளன.

விழிப்புடன் இருக்கும் குடிமக்களை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பறக்கும் படை குழுக்களுடன் இணைக்கும் வகையில் சி-விஜில் இயக்க எளிதாக உள்ளது. அரசியல் முறைகேடு சம்பவங்கள் பற்றி தெரிவிக்க குடிமக்கள் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு செல்லாமல் இந்த செயலியைப் பயன்படுத்தி, சில நிமிடங்களில் புகாரளிக்க முடியும். சி-விஜில் பயன்பாட்டில் புகார் அனுப்பப்பட்டவுடன், புகார்தாரர் ஒரு தனிப்பட்ட ஐடியைப் பெறுவார், இதன் மூலம் நபர் தங்கள் மொபைலில் புகார் மீதான நடவடிக்கையைக் கண்காணிக்க முடியும்.

செயலியைப் பயன்படுத்துவோர் ஆடியோக்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நிகழ்நேரத்தில் பதிவுசெய்கிறார்கள்.  புகார்கள் மீது காலவரம்புக்குட்பட்ட பதிலுக்கான “100 நிமிட” கவுன்ட் டவுன் உறுதி செய்யப்படுகிறது.  சி-விஜில் செயலியில் பயனர் தங்கள் கேமராவை இயக்கியவுடன் பயன்பாட்டு ஸ்விட்ச் தானாகவே ஜியோ டேகிங் அம்சத்தை இயக்குகிறது. இதன் பொருள் என்னவென்றால், புகாரளிக்கப்பட்ட விதிமீறலின் துல்லியமான இடத்தை பறக்கும் படைகள் அறிந்து கொள்ள முடியும். மேலும் குடிமக்களால் பதிவு செய்யப்பட்ட படத்தை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம். குடிமக்கள் பெயர் குறிப்பிடாமலும் புகார்களைத் தெரிவிக்கலாம்.

எம்.பிரபாகரன்

Leave a Reply