ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அல்லாத மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி குஜராத், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்ற தலைமைப் பதவிகளில் பதவி உயர்வால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று இடமாற்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பதவிகளுக்கு  இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் திரு கியானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள்:

1. குஜராத் – சோட்டா உதய்பூர், அகமதாபாத் கிராமப்புற மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்

2.  பஞ்சாப் – பதான்கோட், பாசில்கா, ஜலந்தர் கிராமப்புற மற்றும் மலேர்கோட்லா மாவட்டங்களின் சிறப்புக் காவல்துறை கண்காணிப்பாளர்.

3. ஒடிசா – தென்கனல் மாவட்ட ஆட்சியர் மற்றும் தியோகர், கட்டாக் கிராமப்புற மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள்

4. மேற்கு வங்கம் – புர்பா மேதினிபூர், ஜார்கிராம், புர்பா பர்தமான் மற்றும் பிர்பம் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள்.

அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடனான உறவினர் அல்லது குடும்பத் தொடர்பைக் கருத்தில் கொண்டு பஞ்சாபில் உள்ள பதிண்டா மாவட்ட சிறப்புக் காவல்துறை கண்காணிப்பாளர், அசாமில் சோனித்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை இடமாற்றம் செய்யவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் நிர்வாகம் ஒரு சார்பாக அல்லது சமரசம் செய்யப்படுவதாக கருதப்படும் எந்தவொரு அச்சத்தையும் அகற்றுவதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகளாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவின் கீழ், அந்தந்த மாநில அரசுகள் மாவட்ட ஆட்சியர், சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள்  ஆகியோரை தற்போதைய பொறுப்புகளில் இருந்து உடனடியாக மாற்றவும், ஆணையத்திற்கு அதற்காகன அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

எம்.பிரபாகரன்

Leave a Reply