தமிழக அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 % உயர்த்தியது நியாயமில்லை!-ஜி.கே‌.வாசன் ஆதங்கம்.

ஜி.கே.வாசன்.

தமிழக அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் முறையாக மதிப்பிட வேண்டும். அதாவது அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 % உயர்த்தியது நியாயமில்லை.

குறிப்பாக மாநிலத்தில் சொத்துக்களை வழிகாட்டி மதிப்பீடு செய்யும் முறை அரசுக்கு உண்டு. இருப்பினும் பொது மக்களின் சிரமத்தை அறிந்து, ஆலோசனையைக் கேட்டு மதிப்பீடு செய்திருக்க வேண்டும்.

ஆனால் அரசு, பொது மக்களின் கருத்தைக் கேட்காமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி நடைமுறைப்படுத்துவதால் சிறிய அளவிலான சொத்து (வீடு, மனை, நிலம்) வாங்க முன்வரும், போதுமான பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், அரசு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி, சுற்றறிக்கை அனுப்பியிருப்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதாவது சட்ட விதிமுறைகளை பின்பற்றி சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு செய்ய வேண்டும் என்பது சட்டவிதி.

எனவே அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டை ரத்து செய்து, விதிகளை பின்பற்றி, வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் இயற்கை நீதிப்படி சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு செய்யும் முறையை கொண்டு வரும் வரை 2017 ல் பின்பற்றப்பட்ட மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அரசு உடனடியாக அமல்படுத்தியிருக்கவேண்டும். அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல.

அதாவது உயர்நீதிமன்ற உத்தரவை அரசு கவனத்தில் கொள்ளாமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 % கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வது உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல்.

பொது மக்களின் கோரிக்கையான சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் 2017 ல் பின்பற்றப்பட்ட முறையையே பின்பற்ற வேண்டும் என்பது தான் தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் கோரிக்கையாகும்.

எனவே தமிழக அரசு, பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு செய்ய முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply