81.35 கோடி பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்கள்: மத்திய அமைச்சரவை முடிவு .

பிரதமரின் ஏழைகள் நல உணவுத்  திட்டத்தின் கீழ் சுமார் 81.35 கோடி பயனாளிகளுக்கு  2024-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்  முடிவு செய்துள்ளது.

இது 81.35 கோடி நபர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக விளங்கும் பிரதமரின் ஏழைகள் நல உணவுத்  திட்டத்தில், 5 ஆண்டு காலத்திற்கு ரூ.11.80 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும்.

அமிர்த காலத்தின் போது, இந்த அளவிற்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது, ஆர்வமுள்ள, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளை செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

1.1.2024 முதல் 5 ஆண்டுகளுக்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுத்  திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் (அரிசி, கோதுமை மற்றும் சிறுதானியங்கள்) உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, ஏழைகள் மற்றும் பாதிக்கப்படும் பிரிவினரின் நிதி நெருக்கடியையும் குறைக்கும். இதன் மூலம் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான நியாயவிலைக் கடைகளின் மூலம் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பயனாளிகள் நாட்டின் எந்த நியாயவிலைக் கடையிலிருந்தும் உணவு தானியங்களை இலவசமாக வாங்கிச் செல்ல அனுமதிப்பதால், இது வாழ்க்கையை எளிதாக்க உதவும். இதேபோன்று டிஜிட்டல் இந்தியாவின் கீழ் தொழில்நுட்ப அடிப்படையிலான சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக மாநிலங்களுக்குள்ளும் மேற்கொள்ளப்படும் முன்முயற்சி புலம்பெயர்ந்தவர்களுக்குப் பெரும் பயனளிக்கும் .

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply