ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி இன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் திராவிட மாடல் குறித்து அவர் விமர்சித்துள்ளார். “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது” என்று கூறி உள்ளார்.

ஆர்.என்.ரவி இந்தப் பேட்டியில் திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றி இருப்பது விஷமத்தனமானது; கடும் கண்டனத்திற்கு உரியது.

மனுதரும நீதியை மறுத்து மனித நீதிக்கான குரல், சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை,ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மக்களின் நலன், மொழி, இனம், பண்பாட்டு உரிமை, அரசியல், பொருளாதாரத்துறைகளில் தமிழ்நாட்டின் உரிமைப் பாதுகாப்பு,மாநில சுயாட்சிக்கான குரல் இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல். இதனை வெற்று முழக்கம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முகாரி இராகம் பாடுவது அவரது இந்துத்துவ ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

ஆர்.எஸ் .எஸ் கோட்பாடுகளை ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு உளறிக் கொட்டக் கூடாது. ஆளுநர் பதவியை விட்டு வெளியேறிப் பேசட்டும்.

திராவிட இயக்கக் கருத்தியலை இழிவுப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply