பொது இடங்களில் மது அருந்த அனுமதியா? அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் !- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.

தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி வெளியிட்டிருக்கும் அரசாணையில், “திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள், மாநாட்டு அரங்கங்கள் மற்றும் வணிகம் சாரா வளாகங்களில், வீடு தொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களைப் பரிமாறலாம்.

இதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்குத் துணை ஆணையர்களும் வழங்குவார்கள்.

பி.எல்-2 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று, மதுபானங்களைத் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம். இந்த அறிவிப்புத் தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். முழு மதுவிலக்கு என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு பயணிக்க வேண்டும் என்று நாம் கூறி வரும் நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply