மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து காயம்!-இரவு நேரத்தில் நடந்த துயரம்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலத்தில் இன்று (15/01/2023) இரவு 09 :20 மணியளவில் TN 55 AF 1624 என்ற இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் நிலை தடுமாறி சாலையின் வலது புறத்தில் இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

அச்சமயம் அந்த வழியாக சென்ற நாம், உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தோம். அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

காயம் அடைந்தவரின் குடும்பத்தாருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தின் சாவி மற்றும் காயம் அடைந்தவரின் செல்போன் ஆகியவற்றை 108 ஆம்புலன்ஸ் செவிலியரிடம் ஒப்படைத்தோம்.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மூலம் காவல்துறைக்கும் முறையான தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி காயமடைந்தவரின் பெயர் சங்கர் என்றும், இவர் நம்பர் 1 டோல்கேட் அருகிலுள்ள பழுர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிகிறது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை ஒன்றில் வேலை செய்வதாக சொல்லும் இவர், பொங்கல் விடுமுறையான இன்று எதற்காக இந்த வழியாக வந்தார் என்ற விவரம் தெரியவில்லை.

இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்து நிலைத்தடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்த அந்த நபர் நிலைகொள்ளாத மது போதையில் இருந்தார். அவருக்கு அருகில் தலைக்கவசம் கிடந்தது.

இரவு நேரத்தில் உயிருக்கு போராடிய நபரை போர்க்கால அடிப்படையில் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிம்மதியோடு அங்கிருந்து நாம் புறப்பட்டோம்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply