ஏழை நாடுகளுக்கும், செல்வம் படைத்த நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது!-பதவி ஆசை இல்லாத திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் காலமானார்!

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்; உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265 வது திருத்தந்தையாக இருந்தவர். இவர் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும்.

2005 ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டவுடன் பெயர்மாற்றம் செய்துகொண்டார். 2005 ஏப்ரல் திங்கள் 24 ஆம் நாள் பாப்பரசராக தமது முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். 2005 மே திங்கள் 7 ஆம் நாள் புனித யோவான் லாத்தரன் பேராலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக மூனிச் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயற்பட்டுவந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார்.

உலகமயமாக்கும் போக்கு கடவுள் நம்பிக்கையிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடும் ஆபத்து உள்ளது என்றும், உண்மையான மதிப்பீடுகளை வாழ்வில் கடைப்பிடிக்கும்போதுதான் மனித வாழ்க்கை வளம்பெறும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

கடவுளால் படைக்கப்பட்ட உலகத்தை மனிதர் தம் பகுத்தறிவின் துணைகொண்டு ஆய்ந்து அறிந்து சீரமைக்கும் பொறுப்பு கொண்டுள்ளார்கள். எனவே கடவுள் நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை அல்ல; மாறாக, மனித பகுத்தறிவுக்கு உகந்ததே கடவுள் நம்பிக்கை. ஆனால், பகுத்தறிவு தன்னால் எல்லாம் கூடும் என்று மமதை கொண்டு, கடவுளின் துணை வேண்டாம் என்னும் போக்கில் போவது தவறு. இப்போக்கினைத் திருத்தந்தை பெனடிக்ட் பகுத்தறிவு மிகைவாதம் (rationalism) என்று அடையாளம் காட்டிக் கண்டித்தார்.. மேலும், உண்மை என்று ஒன்று இல்லை எனவும், மனிதர் உண்மையான மதிப்பீடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் கடைப்பிடிக்க இயலாது என்றும் கூறுகின்ற சூழ்நிலைவாத அடக்குமுறை (dictatorship of relativism) என்னும் கொள்கையையும் அவர் தவறு என சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பெனடிக்ட் பல போதனை ஏடுகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் மூன்று சுற்றுமடல்களும் (encyclicals)[3] அடங்கும்.

1) கடவுள் அன்பாய் இருக்கிறார் (God is Love – இலத்தீனில் Deus Caritas Est)[4]:

இது திருத்தந்தை பெனடிக்ட் வெளியிட்ட முதல் சுற்றுமடல். 2005, டிசம்பர் 25 ஆம் நாள், கிறித்து பிறப்பு விழாவன்று கையொப்பமாகி, 2006, ஜனவரி 25இல் வெளியிடப்பட்ட இம்மடலில் கடவுளுக்கும் அன்புக்கும் இடையே நிலவும் நெருங்கிய பிணைப்பு விளக்கப்படுகிறது. கடவுள் மனிதரைத் தம் சாயலாகப் படைத்துள்ளார். கடவுளின் உள்ளார்ந்த இயல்பு அன்பு ஆகும். அந்த அன்பு மனிதரின் இயல்பாகவும் உள்ளது. எனவே மனிதர் கடவுளையும் மனிதரையும் அன்பு செய்யும் திறன் கொண்டுள்ளார்கள். மனிதர் காட்டும் அன்புக்கு ஊற்றாகவும் அது நிகழ்வதற்கு வழியாகவும் அமைவது கடவுளின் அன்புதான். கடவுளையும் மனிதரையும் பிணைக்கின்ற இந்த அன்பு மனிதரின் தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் துலங்க வேண்டும்.

இச்சுற்றுமடலின் முதல் சொற்கள் விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டவை: கடவுள் அன்பாய் இருக்கிறார் (1 யோவான் 4:16). மேலும், அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார் (1 யோவான் 4:16).

பிறரோடு பகிர்தலும் பிறரிடமிருந்து பெறுதலும் அன்பின் இரு அடிப்படைப் பண்புகள் ஆகும். இதுவே கடவுளின் இயல்பு கூட. அவர் தம்மையே மனிதருக்குக் கையளித்து, தம் உறவை மனிதரோடு பகிர்கின்றார். அதே வேளையில் கடவுள் மனிதரிடமிருந்து பெறுகின்ற அன்பில் கடவுள் மகிழ்கின்றார். இந்த இருவகை அன்பு கிரேக்க கலாச்சாரத்தில் eros, மற்றும் agape என்று அறியப்பட்டன. தன்னையே பலியாக்கி அளிக்கும் அன்பு (agape) பிறருக்கு வாழ்வளிக்கும். பிறரிடமிருந்து பெறும் அன்பு (eros) புலன்களுக்கு மகிழ்வூட்டித் திளைக்கச் செய்யும். இவை இரண்டிற்குமே ஊற்று கடவுள்தாம் என்பதால் இவற்றை மனிதர் பிரித்தலாகாது.

2) எதிர்நோக்கால் மீட்படைகிறோம் (Saved by Hope – இலத்தீனில் Spe Salvi)[5]:

இச்சுற்றுமடல் 2007, நவம்பர் 30ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு வெளியானது. உலகில் ஏற்படுகின்ற துன்பங்களின் நடுவே நம்பிக்கை இழக்காமல் வாழ்வது எப்படி? ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்கி வாழ்வது எப்படி? என்று இம்மடல் விளக்குகிறது. மனிதர் பிற மனிதரை மதிக்காமல் அடிமைகள்போல நடத்துகின்ற வேளைகளில், காரணமின்றி இழிவுபடுத்துகின்ற வேளைகளில் எதிர்நோக்கு என்னும் நற்பண்பு நம்மிலிருந்து மறைந்துவிடலாகாது. துன்பமும், துயரமும், அநீதியும், அடிமைத்தனமும் ஒருநாள் மறைந்தொழியும் என்பது கிறித்தவம் தருகின்ற நம்பிக்கை, எதிர்நோக்கு. இதைத் திருத்தந்தை பெனடிக்ட் இம்மடலில் விளக்குகின்றார்.

இம்மடலின் கருத்து தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது: நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும் எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? (உரோ 8:24).

3) உண்மையில் தோய்ந்த அன்பு (Love in Truth – இலத்தீனில் Caritas in Veritate)[6]:

இச்சுற்றுமடல் 2009, சூன் 29ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு, சூலை 7ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில் திருத்தந்தை பெனடிக்ட் சமூக நீதி பற்றிப் பேசுகின்றார். இன்றைய உலகில் நிலவுகின்ற சமூக அநீதிகள் பல. ஏழை நாடுகளுக்கும் செல்வம் படைத்த நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி செல்வம் குவிக்கின்றன. இலாப நோக்கோடு மட்டுமே வியாபார உறவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசடைவது பற்றிப் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இத்தகு குறைபாடுகளைக் களைய வேண்டும் என்றால் மனிதரிடையே அன்பு வளர வேண்டும் என்று பெனடிக்ட் அறிவுறுத்துகிறார். அந்த அன்பு உண்மையின் அடிப்படையில் எழ வேண்டும். அப்போதுதான் மக்களிடையே நீதி நிலவும் சமுதாயம் உருவாகும்.

திருத்தந்தை பெனடிக்ட் நவீன சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். வத்திக்கான் நகரிலிருந்து திருத்தந்தையின் உரைகள் யூடியூபில் வெளியாகின. முகநூல் வழியாகவும் வத்திக்கான் செய்தித் தொடர்பில் ஈடுபட்டுவந்தது

2012 டிசம்பர் மாதத்திலிருந்து திருத்தந்தை பெனடிக்ட் டிவிட்டர் வழியாகத் தொடர்பு கொண்டார். 12/12/12 அன்று அவர் அனுப்பிய முதல் டிவிட்டர் செய்தி:

நண்பர்களே, டிவிட்டர் வழி உங்களோடு தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் தாராள ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு என் இதயப்பூர்வமான ஆசியை வழங்குகின்றேன்.

திருத்தந்தை பெனடிக்ட் உலகில் பரவலாகப் பேசப்படுகின்ற எட்டு மொழிகளில் டிவிட்டர் செய்திகளை அனுப்பினார். அம்மொழிகள்: ஜபானியம், போர்த்துகீசியம், ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்சு, போலிஷ், ஜெர்மன், அரபி ஆகியன.

2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதியிலிருந்து திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்டார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19 ம் நாள் கர்தினால்கள் அவையால் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து பிப்ரவரி 28-ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அவ்வறிக்கையில் கூறியிருந்தார்.

பணிதுறப்புக்குப் பின்பு வத்திக்கான் நகரின் தோட்டத்திலுள்ள “மாத்தர் எக்லேசியே” (திருச்சபையின் அன்னை) என்னும் துறவு இல்லத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தங்கி இறைவேண்டலில் ஈடுபட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முதுமையின் காரணமாக இன்று காலமானார்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply