இமாச்சலப் பிரதேசத்தில் 9 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த உடும்புகள், பாம்புகளின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு.

9.1 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த உடும்புகள் மற்றும் பாம்புகளின் புதைபடிமங்கள் இமாச்சலப் பிரதேசத்தின் ஹரிதல்யங்கரில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அன்றைய காலகட்டத்தில் அப்பகுதியில் இருந்த பருவநிலையைப் போன்று தான் தற்போதும் உள்ளது என்பது இந்த கண்டுபிடிப்பின் மூலம் அறியப்படுகிறது.

உடும்புகள் மற்றும் பாம்புகளின் பல்லுயிராக்கம், வெப்பநிலை மற்றும் பருவநிலைகளை அதிகம் சார்ந்து இருக்கும். இந்தக் காரணத்திற்காக தான் இது போன்ற ஊர்வனங்கள் சுற்றுப்புற வெப்பநிலை உள்ளிட்ட கடந்தகால பருவநிலைகளை துல்லியமாக சுட்டிக் காட்டுகின்றன.

சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகம், ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஸ்லோவாக்கியா நாட்டின் காம்னியஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான டேராடூனில் உள்ள வாடியா இமாலய புவியியல் நிறுவனம், இந்தப் பகுதியில் உடும்பு, மலைப்பாம்பு ஆகியவை இருந்ததாக முதன் முறையாக பதிவு செய்துள்ளது.

ஆசியாவில் இந்த வகை உடும்பின் புதைபடிமம் மிகவும் அரிது என்ற காரணத்தால் ஹரிதல்யங்கரில் அவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல மலைப் பாம்பின் புதைபடிமம் இதற்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் குஜராத்தின் கட்ச்சில் மட்டுமே இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எம்.பிரபாகரன்

Leave a Reply