குழந்தைகள் தினத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

குழந்தைகள் தினமான இன்று (நவம்பர் 14, 2022) பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், குழந்தைப் பருவம் வாழ்க்கையின் மிக அழகான கட்டம் என்று கூறினார்.  குழந்தைகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். இதுவே அவர்களை  உயிர்ப்புடன் வைத்திருப்பதாக அவர் கூறினார். இன்று  நாம் குழந்தைகளின் களங்கமில்லா தன்மையையும், தூய்மையையும்   கொண்டாடுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு புதிய தலைமுறையும், புதிய வாய்ப்புகள் மற்றும் கனவுகளை கொண்டுவருகின்றன என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்த புதிய யுகம் தொழில்நுட்பம் மற்றும் தகவல் புரட்சியை கொண்டது என்றும் அவர் தெரிவித்தார். குழந்தைகள் தற்போது பல்வேறு குடும்ப, சமூக மற்றும் சுற்றுப்புற சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதாக அவர் கூறினார்.  தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.   சிறந்த மதிப்பீடுகளை குழந்தைகளுக்கு கற்பித்து அவர்களை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களில் ஈடுபடுத்துவது மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.  

பெரிய அளவில் கனவு காண வேண்டும் என்றும் புதிய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி கனவு காணுமாறும் குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார்.  இன்றைய கனவுகள் நாளைய நனவாக மாறும் என்று அவர் கூறினார். தாங்கள் வளரும் போது எந்த மாதிரியான இந்தியாவில் வாழ வேண்டும் என  விரும்புகிறீர்கள் என்பது பற்றி சிந்திக்குமாறு குழந்தைகளிடம் அவர் அறிவுறுத்தினார்.  முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் கடமைப்பாதையில் செல்லுமாறு வலியுறுத்திய குடியரசுத் தலைவர், அது தானாகவே மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டு செல்லும் என்று குறிப்பிட்டார்.  இன்று குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் பாதை வருங்கால இந்தியாவின் பயணத்தை தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  வளர்ந்த பின்னரும் குழந்தைப் பருவத்தை மறக்காமல் உயிர்ப்புடன் வைத்திருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்தியாவின் கலாச்சாரத்துடன்  இணைந்திருக்குமாறு வலியுறுத்திய குடியரசுத் தலைவர், பெற்றோரை எப்போதும் மதிக்க வேண்டும் என்றும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply