உத்தராகண்ட் மாநிலம் மனாவில் ரூ.3400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் கம்பிவடத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.

என்னைப் பொறுத்தவரை எல்லையில் உள்ள ஒவ்வொரு கிராமமும் நாட்டின் முதல் கிராமம்”

நமது பாரம்பரியத்தின் பெருமையும், வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளும்தான் 21ஆம் நூற்றாண்டின் வளர்ந்த இந்தியாவிற்கு இரண்டு முக்கியத் தூண்கள்.

உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் இந்த வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.

“ஷ்ரம்ஜீவிகள் கடவுளின் வேலையைச் செய்கிறார்கள், நீங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்கிறீர்கள், அவர்களை ஒருபோதும் ஊதியம் பெறும் வேலையாட்களாகக் கருத வேண்டாம்”

“இந்த ஆலயங்களின் பாழடைந்த நிலை அடிமை மனநிலையின் தெளிவான அறிகுறியாகும்”

“இன்று, காசி, உஜ்ஜயினி, அயோத்தி மற்றும் பல ஆன்மீக மையங்கள் தங்கள் இழந்த பெருமையையும் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்கின்றன”

“உங்கள் பயண பட்ஜெட்டில் 5 சதவீதத்தை உள்ளூர் பொருட்களை வாங்க எடுத்துக் கொள்ளுங்கள்”

 “மலைவாழ் மக்களின் சகிப்புத்தன்மை அவர்களுக்கு எதிரான ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டது”

“நாங்கள் இந்த எல்லைப் பகுதிகளிலிருந்து வேலை செய்யத் தொடங்கினோம், அவற்றை செழிப்பின் தொடக்கமாகக் குறிக்கிறோம்”

“எல்லைப் பகுதிகள் வளர்ச்சியைக் கொண்டாடும் ஒரு துடிப்பான வாழ்க்கையைப் பெற நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்”

உத்தராகண்ட் மாநிலம் மானாவில் ரூ.3400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் கம்பிவட ஊர்தித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். முன்னதாக, பிரதமர் கேதார்நாத் சென்று ஸ்ரீ கேதார்நாத் கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். அவர் ஆதி குரு சங்கராச்சாரியார் சமாதிக்கு சென்று மந்தாகினி அஸ்தபத் மற்றும் சரஸ்வதி அஸ்தபத் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். பிரதமர் பத்ரிநாத் சென்று ஸ்ரீ பத்ரிநாத் கோயிலில் தரிசனம் மற்றும் பூஜையும் செய்தார். பின்னர் அலக்நந்தா நதிக்கரையோரம் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சிவாலயங்களில் தரிசனம் மற்றும் பூஜை செய்த பின்னர் தனது ஆனந்த உணர்வை வெளிப்படுத்தினார். “என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது, மனம் மகிழ்ச்சியடைந்தது, இந்தத் தருணங்கள் உயிர்ப்புடன் மாறியுள்ளன” என்று அவர் கூறினார்.  இந்த தசாப்தம் உத்தராகண்ட் மாநிலத்திற்கு சொந்தமானது என்று தனது முந்தைய பயணத்தின் போது பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர், பாபா கேதார் மற்றும் பத்ரி விஷால் அந்த வார்த்தைகளை ஆசீர்வதிப்பார்கள் என்று முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறினார். “இன்று, இந்த புதிய திட்டங்களுடன் அதே உறுதியை மீண்டும் வலியுறுத்த நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்”, என்று அவர் கூறினார்.

இந்தியாவின் எல்லையில் உள்ள கடைசி கிராமமாக மனா கிராமம் அறியப்படுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், “என்னைப் பொறுத்தவரை, எல்லையில் உள்ள ஒவ்வொரு கிராமமும் நாட்டின் முதல் கிராமம், எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்கள் நாட்டின் பலமான காவலர்களாக உள்ளனர் என்றார். அந்தப் பகுதியுடனான தனது நீண்ட தொடர்பையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். அந்தப் பகுதி மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பற்றிக் குறிப்பிட்ட அவர், தொடர்ந்து அன்பும், ஆதரவும் அளித்து வரும் மனா மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த இந்தியாவின் இரண்டு முக்கிய தூண்கள் குறித்து பிரதமர் பேசினார். “முதலாவது, நமது பாரம்பரியத்தின் பெருமை. இரண்டாவது, வளர்ச்சிக்கான அனைத்து சாத்தியமான முயற்சிகளும். இன்று உத்தராகண்ட் இந்த இரண்டு தூண்களையும் பலப்படுத்தி வருகிறது”, என்று அவர் கூறினார். கேதார்நாத் மற்றும் பத்ரி விஷால் தரிசனங்களால் தாம் ஆசீர்வதிக்கப்பட்டதாகக்  கூறிய அவர், “130 கோடி மக்களும் எனக்கு கடவுளின் வடிவம்” என்றார்.

கேதார்நாத் முதல் கௌரிகுண்ட் மற்றும் ஹேம்குண்ட் ரோப்வே ஆகிய இரண்டு கம்பிவடப் பாதைகளைக் குறிப்பிட்ட பிரதமர், பாபா கேதார்நாத், பத்ரி விஷால் மற்றும் சீக்கிய குருக்களின் ஆசீர்வாதமே முன்னேற்றத்திற்கு காரணம் என்றார். உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் முன்னெப்போதும் இல்லாத இந்த முன் முயற்சி நிறைவடையும் போது மகிழ்ச்சி அடைவார்கள் என்று பிரதமர் கூறினார்.

கடினமான பணிச்சூழலில் இந்தத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஷ்ரம்ஜீவிகள் மற்றும் பிற பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்திப்பதாக பிரதமர்  கூறினார். “அவர்கள் கடவுளின் பணியைச் செய்கிறார்கள், நீங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்கிறீர்கள், அவர்களை ஒருபோதும் ஊதியம் பெறும் தொழிலாளர்களாகக் கருதுவதில்லை, அவர்கள் ஒரு தெய்வீகத் திட்டத்திற்கு பங்களிக்கிறார்கள்” என்று பிரதமர் கூறினார். கேதார்நாத்தில் ஷ்ரம்ஜீவிகளுடன் அவர் உரையாடியதைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் பணிகளை பாபா கேதாரை வணங்குவதற்கு ஒப்பிட்டது ஒரு சிறந்த அனுபவம் என்று கூறினார்.

காலனித்துவ மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும் என்று செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து தாம் நாட்டு மக்களுக்கு விடுத்த அழைப்பை நினைவு கூர்ந்த பிரதமர், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வேண்டுகோளை விடுக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அடிமைத்தனத்தின் அளவுகோலாக கருதப்படுகிறது என்று கூறிய பிரதமர், சிலர் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை   குற்றமாகக் கருதுகின்றனர் என்றார். நீண்ட காலமாக நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மிக மோசமான நிலையில்  இருந்ததாகக் கூறிய அவர், தற்போது உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் இந்த ஆலயங்களைப் புகழ்வதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள் என்று தெரிவித்தார்.  கடந்த கால முயற்சிகளை நினைவுகூர்ந்த பிரதமர், சோம்நாத் கோவில் மற்றும் ராமர் கோவில் கட்டும் போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் என்று கூறினார்.

“இந்த ஆலயங்களின் பாழடைந்த நிலை அடிமை மனப்பான்மையின் தெளிவான அறிகுறியாகும்” என்று திரு மோடி கூறினார். இந்த ஆலயங்களுக்கு செல்லும் பாதைகள் கூட மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக அவர் கூறினார். “இந்தியாவின் ஆன்மீக மையங்கள் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டன”, என்று அவர் தெரிவித்தார். இதற்கு முந்தைய அரசுகளின் சுயநலம் தான் காரணம். இந்த ஆன்மீக மையங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பக்தியை வளர்க்கும் இடங்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.  “இன்று, காசி, உஜ்ஜயினி, அயோத்தி மற்றும் பல ஆன்மீக மையங்கள் தங்கள் இழந்த பெருமையையும், பாரம்பரியத்தையும் மீட்டெடுக்கின்றன. கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் சேவைகளை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் போது நம்பிக்கை மேலும் வலுப்படுகிறது” என்றார் அவர். “அயோத்தியில் ராமர் கோவிலில் இருந்து குஜராத்தின் பவகாத்தில் உள்ள மா காளிகா கோவில் வரை தேவி விந்தியாச்சல் வழித்தடம் வரை இந்தியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரிய மேம்பாடு பிரதிபலிக்கிறது” என்று அவர் விளக்கினார். இந்த நம்பிக்கை மையங்களை யாத்ரீகர்கள் எளிதில் சென்றடைவார்கள் என்றும், அறிமுகப்படுத்தப்படும் சேவைகள் முதியவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

உள்ளூர் சுயஉதவிக் குழுக்களின் முயற்சிகளையும் உள்ளூர் பொருட்களையும் புகழ்ந்துரைத்த பிரதமர், நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.   நாட்டின் எந்தப் பகுதிக்கு சுற்றுலாவாக நீங்கள் சென்றாலும், உங்களின் பயணச் செலவில் 5 சதவீதத்தை உள்ளூர் பொருட்களை வாங்க ஒதுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இது உள்ளூர் பொருட்களுக்கு பெரிய சந்தையை அளிக்கும் என்றும் உங்களுக்கும் அதிக திருப்தி ஏற்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மலைப்பகுதிகளைச் சேர்ந்த மக்களின் உடல் உறுதி, அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குறை கூறினார். அவர்களின் கடின உழைப்புத் தன்மையும், வளமும், அவர்களுக்கு எந்த வசதிகளும் இல்லாமல் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. வசதிகள் மற்றும் பயன்களுக்கான முன்னுரிமையை அவர்கள் இழந்துவிட்டனர். இதனை நாம் மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். ஏற்கனவே, நாட்டின் எல்லைகள் என்ற முறையில், இந்தப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன.  வளத்தின் தொடக்கம் இவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பணி செய்ய ஆரம்பித்தோம். இந்த மலைப்பகுதிகளின் சவால்களுக்கு தீர்வு காண நாங்கள், முயற்சி செய்தோம். இதற்கு உள்ளூர் மக்களின் ஏராளமான சக்தி  பயன்படுத்தப்பட்டது என்பதை பிரதமர் விவரித்தார்.

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், வீடுகள்தோறும் குடிநீர். பஞ்சாயத்துக்களை கண்ணாடி இழை வழியாக இணைத்தல், ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள், தடுப்பூசி செலுத்தும்போது மலைப்பகுதிகளுக்கு முன்னுரிமை, பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்க்கையை எளிதாக்கும் நடவடிக்கையாக ஏழைகளுக்கு விலையில்லா ரேஷன், இந்த மக்களுக்கு கவுரவம் அளித்தல் போன்ற அரசின் நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.  இது போன்ற வசதிகள், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை இளைஞர்களுக்கு தந்தன.  சுற்றுலாவை அதிகப்படுத்தின.   இளைஞர்களின்  திறன் மேம்பாட்டுக்கு  இரட்டை எஞ்சின் அரசு   தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லைப்பகுதி இளைஞர்களை என்சிசி-யுடன் இணைப்பதற்கான இயக்கம் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.

நவீனமான போக்குவரத்து தொடர்பு என்பது தேசப்பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளில், இதற்காக ஒன்றன் பின் ஒன்றாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார். சில ஆண்டுகளுக்கு முன், பாரத் மாலா, சாகர் மாலா என்ற இரண்டு பெரிய போக்குவரத்து திட்டங்கள் தொடங்கப்பட்டதை அவர் எடுத்துரைத்தார். பாரத்மாலா  திட்டத்தின் கீழ், நாட்டின் எல்லைப்பகுதிகள் இணைக்கப்பட்டதோடு மிகச் சிறந்த விரிவான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன என்றும் சாகர் மாலா திட்டத்தின் கீழ், இந்தியாவின் கடலோரப் பகுதிகளின் போக்குவரத்து வலுப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.  கடந்த 8 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஜம்மு காஷ்மீரிலிருந்து அருணாச்சல பிரதேசம் வரை, எல்லைப்பகுதி போக்குவரத்து விரிவாக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார். 2014 முதல் எல்லைப்புற சாலைகள் அமைப்பு சுமார் 7,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகளை அமைத்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பல முக்கியமான சுரங்கப் பாதைப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று பிரதமர் தெரிவித்தார்.

கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் எப்போதும் மாநிலத்தின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். இந்த நம்பிக்கையை பெறுவதற்கு பாபா கேதார், பத்ரி விஷாலிடமிருந்து ஆசிகளைக் கோர நான் இங்கே வந்திருக்கிறேன் என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் ஆளுநர் ஓய்வு பெற்ற ஜெனரல் குர்மித் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் திரு தீரத் சிங் ராவத், உத்தராகண்ட் அமைச்சர் திரு தன்சிங் ராவத், பிஜேபி மாநிலத்தலைவர் திரு மகேந்திர பட் உள்ளிட்டோர் இந்நிகழ்வில், பங்கேற்றனர்.

திவாஹர்

Leave a Reply