காவல்துறை நினைவு தினத்தை’ முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுதில்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில், உயிரிழந்த காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.

‘காவல்துறை நினைவு தினத்தை’ முன்னிட்டு புதுதில்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில், உயிரிழந்த காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.அமித்ஷா இன்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு.அஜய் குமார் மிஸ்ரா, திரு.நிஷித் பிராமணிக் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, இந்தியா இன்று அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது என்றும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், உறுதியுடனும், வேகத்துடனும் இலக்கை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்று மனநிறைவுடன் கூற முடியும். நம் நாடு செய்துள்ள எண்ணற்ற சாதனைகளின் பின்னணியில், காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்களின் துணிச்சல் மிக்க உயிர்த்தியாகம் உள்ளதாகத் தெரிவித்தார். நாடு முழுவதுமிருந்து 35,000-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்கள் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு பணியின் போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

உயிர் நீத்த வீரர்களுக்கு தேசத்தின் சார்பில் நன்றியுடன் அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் அமித்ஷா, உயிரிழந்த வீரர்களின் தியாகம் என்றும் வீண் போகாது என்று குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply