அரசியல் வழி தமிழ், இலக்கியம், கலை பண்பாடு வளர்த்த மலேசிய ‘துன்’ சாமிவேலு மறைவு!-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்.

மலேசிய இந்தியர் காங்கிரசின் எழுபத்தாறு ஆண்டு கால வரலற்றில், அறுபது ஆண்டுகள் அதனுடன் இணைந்து பயணித்தவர்; பணியாற்றியவர். முப்பது ஆண்டுகள் தலைமைத்துவம் வழங்கியவர் ‘துன்’ சாமிவேலு அவர்கள் ஆவார். 8.3.1936 இல் பிறந்த அவர் நேற்று 15.09.2022 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

கட்டடக் கலை அலுவலகத்தில் ஓடும்பிள்ளையாக, அலுவலகத் தம்பியாகப் பணியைத் தொடங்கிய சாமிவேலு அவர்கள், பின்னர் அதே துறையில் படித்துப் பட்டம் பெற்றார்.1950 ஆம் ஆண்டுகளில் அகில மலாயா தமிழர் சங்கம் நடத்திய தமிழர் திருநாள் விழாக்களின் மூலம் அடையாளம் காணப்பட்டவர்

1974ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 1978ஆம் ஆண்டு துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.பின்னர் 1979ஆம் ஆண்டு அமைச்சரவையில் இடம் பெற்றார். அன்றிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை மலேசிய அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக தொடர்ந்து பணியாற்றி வந்தார். மிக முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

ம.இ.கா. தலைமைத்துவத்தை ஏற்றிருந்தபோது இந்திய சமுதாயத்தை உருமாற்றம் செய்ய முயற்சிகள் பல மேற்கொண்டார்.எம்.ஐ.இ.டி. என்ற கல்வி இயக்கத்தின்வழி பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களை பாட்டதாரிகளாக்கினார்.இந்தியர்களுக்காக உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்.

மலேசிய அரசியல்வாதிகளுள் அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்தவர் சாமிவேலு அவர்கள்தான். அதற்கு ஈடான புகழைச் சுமந்தவரும் இவர்தான்.மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பதவி வகித்த இந்தியர் என்கின்ற சிறப்பு இவருக்கு உண்டு. அதேவேளையில், மலேசிய இந்தியர் காங்கிர° எனும் இந்தியர்களின் அரசியல் கட்சியில் நீண்ட காலம் தலைவர் பதவியை வகித்தவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்தச் சூழலிலும் எந்தக் களத்தையும் சந்திக்க தயங்காதவர். அரசியல்வாதியாக இருந்தாலும் கலை, இலக்கியம், சமயம், பண்பாடு என எல்லா முன்னெடுப்புகளுக்கும் துணை நின்றவர்.
தமிழ் நூல் வெளியீடுகளுக்கு புதிய இலக்கணம் கண்டார். குறிப்பாக இலக்கியவாதிகளுக்கு நிழலாக இருந்தவர். புத்தக வெளியீடுகளில் கலந்துகொண்டு கணிசமான தொகையைக் கொடுத்து எழுத்தாளர்களுக்கு ஆதரவளித்தார். அதேவேளையில், தன் அரசியல் சகாக்களை நூல் வெளியீடுகளுக்கு உதவச் சொல்லி எழுத்தாளர்களுக்கு உதவியவர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மலேசியாவிற்கு சென்றபோது, அந்த ஏற்பாட்டுக் குழுவிலும், பின்னர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது அதன் ஏற்பாட்டுக் குழுவிலும் இருந்து பணியாற்றியவர்.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும், ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் தலைமை ஏற்று நடத்தியவர்.

மலேசியாவின் முதன்மையான விருதாக விளங்கும் ‘துன்’ விருதை சம்மந்தன் அவர்களுக்குப் பிறகு இரண்டாவதாகப் பெற்ற இந்திய வம்சாவளி தலைவர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர்.அப்பேர்பட்ட ‘துன்’ சாமிவேலு அவர்களின் மறைவு மலேசியத் தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருரும் அவரது குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply