கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகளை கட்டித் தருவேன்!-நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை.

நடிகர் ராகவா லாரன்ஸ்.

ஹாய், நண்பர்களே மற்றும் ரசிகர்களே, கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த, நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளேன். உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதம் தேவை.

கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும், துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன். எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும், அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகிறேன்.

ஒரு தனியார் தொலைகாட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாய் ஒரு குடும்பம் பற்றி பார்த்தேன். வேதனை அடைந்து விட்டேன். அந்த குடிசை வீடு அழகாக கட்டித்தர எவ்வளவு ஆகும்? மிஞ்சி போனால், ஒரு லட்சம் ஆகும். அந்த வீடு மட்டுமில்லை, இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்.

அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால், நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள், நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.

ஒரு தனியார் தொலைகாட்சியும், இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்.

இவ்வாறு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply