கல்குவாரியில் பிணமாக கிடந்த பள்ளி மாணவன்!- திருச்சி வாழவந்தான் கோட்டையில் நடந்த பயங்கரம்.

பள்ளி மாணவன் தனுஷ்கோபி.

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி, வாழவந்தான் கோட்டை, ஈச்சங்காட்டுப் பகுதியை சேர்ந்தவர் ஆலந்துரை, இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இவரது இளைய மகன் தனுஷ்கோபி (14) திருவெறும்பூரில் உள்ள அரசு உதவி பெரும் தனியார் மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். நேற்று மாலை 6 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்ற தனுஷ்கோபி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அதனைத்தொடர்ந்து அவனது தந்தை ஆலந்துரையும்அவரது உறவினர்களும், தனுஷ்கோபியை பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால், தனுஷ்கோபி எங்கு போனான்? என்ன ஆனான்? என்று தெரியாமல் தவித்துள்ளனர். வேறு வழியில்லாமல் நேற்று  துவாக்குடி காவல்நிலையத்தில் ஆலந்துரை புகார் கொடுத்தார்.

இந்நிலையில், இன்று தனுஷ்கோபி படிக்கும் பள்ளிக்கு சென்று வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் ஆலத்துரை உறவினர்கள் விசாரித்தபோது, அதேப் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், தனுஷ்கோபியின் சைக்கிள் ஈச்சங்காடுப் பகுதியில் உள்ள துரை என்பவரது கல்குவாரி அருகே நின்றதாக கூறி உள்ளான்.

அதன் அடிப்படையில், அங்க போய் பார்த்தப்போது தனுஷ்கோபி சைக்கிள் நின்றுள்ளது. தனுஷ்கோபியை அந்த கல்குவாரி பகுதியில் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது சுமார் 300 அடி ஆழமுள்ள கல்குவாரி பள்ளத்தில் தனுஷ்கோபி உடல் கிடப்பது தெரிந்தது.

உடனே, அவரது உறவினர்கள் துவாக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி போலீசார், தனுஷ்கோபியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைகாக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தனுஷ்கோபியை யாரோ கொன்று கல்குவாரியில் வீசி விட்டதாக தனுஷ்கோபியின் பெற்றோரும், உறவினர்களும் கூறி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply