மனிதன் எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சிகளை எட்டினாலும், மற்ற ஜீவராசிகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் குணங்களில் ஈகை குணமும் ஒன்று.
தன்னிடம் இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதில் மனித மனங்களில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாதது ஆகும். இருப்பினும் அது போன்ற மகிழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் பல மனிதர்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் போட்டியில் உலகத்தில் தங்களது முழு நேரத்தையும் செலவிடுவதால் பசிக்கின்றவருக்கு உணவு வழங்கிடவும், தேவை அறிந்து பொருள் உதவி செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை நினைத்து ஏங்குபவர்களுக்காக திருவாரூரில் “அன்புச் சுவர்” ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் சேவை சங்கங்கள் தன்னார்வலர்கள் சார்பில் திறக்கப்பட்டுள்ள இந்த “அன்புச் சுவர்” அலமாரி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆடைகள் மற்றும் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் அங்கு கொண்டு வந்து வைத்து விட்டு செல்கின்றனர். அதனை தேவைப்படும் நபர்கள் எடுத்துச் செல்கின்றனர்.
இருப்போர் கொடுக்கவும். இல்லாதோர் எடுக்கவும் சேவை உள்ளங்களால் தொடங்கப்பட்டுள்ள இந்த “அன்புச் சுவர்” அமைப்புக்கு திருவாரூரில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அதனால்தான் திருவள்ளுவர்,
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். –என்கிறார்.
-க.மகேஷ்வரன்.
supper Valluvar kanda tamilnadu valkai valvadarke.