மயிலாடுதுறை அருகே 75 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை!- குடியரசு தின நாளில் நடந்த கொடூரம்!

நாகப்பட்டிணம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அருகே உள்ள தெற்கு கார்குடி மெயின் ரோட்டை சேர்த்த 75 வயதான அரும்பு என்ற மூதாட்டி, தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் கோவிந்த ராஜ் பத்து வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

யாரும் ஆதரவற்ற நிலையில் அரசு முதியோர் உதவி தொகையை கொண்டு அரும்பு தன் வாழ்நாளை கடத்தி வந்தார்.

இந்நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் அரும்பு வெளியில் நடமாட்டமில்லாததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அரும்பு கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மணல்மேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பி.களிய தீர்த்தம் தலைமையிலான மணல்மேடு காவல் துறையினர், அரும்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க சங்கிலிக்காக அரும்பு கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பந்தமாக மணல்மேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-பி.செல்வம்.

 

 

 

 

Leave a Reply