தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மருத்துவக்குடியை சேர்ந்தவர் ம.க. ராஜா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இவரது அண்ணன் ம.க.ஸ்டாலின் பா.ம.க. கட்சியின் மாநில துணைத்தலைவராக உள்ளார்.
இந்நிலையில், தொடர் விடுமுறையின் காரணமாக வழக்கறிஞர் ம.க. ராஜா, சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் 03.04.2015 வெள்ளிக்கிழமை இரவு தேபெருமாநல்லூர் என்ற இடத்தில் காளியாட்டம் திருவிழா நடைபெறுவதை அறிந்து, அதனை காண்பதற்காக காரில் சென்றார். அவருடன் பாலமுருகன் என்பவர் உள்பட 3 பேர் சென்றனர்.
அவர்கள் திருவிழா பார்த்துவிட்டு திருநாகேஸ்வரம்–கும்பகோணம் இடையே உள்ள கோவில் சன்னாபுரம் ரெயில்வே கேட் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று, ம.க.ராஜா வந்த கார் மீது மோதியது. இதனால் நிலைக்குலைந்த ம.க.ராஜா, அதிர்ச்சியோடு காரில் இருந்து கீழே இறங்கினார்.
அப்போது, மோதிய காரில் இருந்து 4 பேர் முகமூடி அணிந்து அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் ம.க.ராஜாவை கொலை செய்யும் நோக்கத்துடன் ஓடி வந்தனர்.
இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பிக்க ராஜா ½ கிலோமீட்டர் தூரம் வரை ஓடினார். இருந்த போதிலும் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதனை தடுக்க முயன்ற பாலமுருகனையும் கொலைக்காரர்கள் தாக்கினர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், திருவிடை மருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ம.க.ராஜா உடலை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ம.க.ராஜா கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி முழுவதும் காட்டு தீயைப்போல பரவியது. இதனால், அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பா.ம.க. தொண்டர்களும் கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு பேருந்தையும் அடித்து உடைத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் மற்றும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு ஆயுதப்படை போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.
இந்த கொலையில் தொடர்புடைய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் தான் கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது முழுமையாக தெரியவரும்.
ஏற்கனவே, நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த செம்பனார்கோவில், மேலமுக்கூட்டு பகுதியைச் சேர்ந்த வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர். கா.அ. மூர்த்தி 02.11.2014 அன்று பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் அகோரம் 03.11.2014 அன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
அதற்குள் அதே போன்று, வழக்கறிஞர் ம.க. ராஜா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், வன்னியர்கள் மத்தியிலும், பா.ம.க. தொண்டர்கள் மத்தியிலும் பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-கே.பி.சுகுமார்.
ullatchithagaval@gmail.com