காயல்பட்டினம் அரசு  மருத்துவமனைக்கு, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் திடீர் வருகை!

??????????????????????????????????????????????????????????????

அலுவல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள,  தமிழக அரசு சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று காலை 08.00 மணியளவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு திடீரென வருகை தந்தார்.

 அவருடன், தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் திவாகரன், அதன் துணை இயக்குநர் டாக்டர் உமா, தமிழக சுகாதார திட்டப் பணிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிங்ஸ்டன் ஆகியோர் வந்திருந்தனர்.

அவர்களை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஃப்ரீ ஆகியோர்  வரவேற்றனர். மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், அவற்றின் செயல்பாடுகள் குறித்து தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள் குறித்து, சிகிச்சைக்கு வந்திருந்த புறநோயாளிகளிடமும் அவர் விசாரித்தார்.

மருத்துவமனைக்கு நிரந்தர பொது மருத்துவர், மகப்பேறு மருத்துவர் நியமனம், ஆளில்லாப் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்கள் நியமனம், மருத்துவமனை வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவப் பிரிவுகள் அனைத்தையும் இணைக்கும் வகையிலான மேற்கூரை அமைத்தல், தமிழக அரசின் மூலம் காயல்பட்டினத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு, அரசு மருத்துவமனையிலேயே கீமோதெரபி சேவை, கோமான் ஜமாஅத் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இடத்தில், காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்டல் உள்ளிட்ட கோரிக்கைகளை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சுகாதாரத் துறை முதன்மைச் செயலரிடம் வழங்கினார்.

ஏற்கனவே, இவை குறித்து பல்வேறு தருணங்களில் தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும், விரைந்து பரிசீலித்து ஆவன செய்யுமாறும் அவரிடம் நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

பெற்றுக்கொண்ட அனைத்துக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைக்கு, தான் அலுவலகம் சென்றதும் விரைந்து ஆவன செய்வதாக ஜெ.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.

இந்நிகழ்வின்போது, அரசு மருத்துவமனை மருத்துவர் ஹேமலதா, ஆரம்ப சுகாதார நிலைய துணை ஆய்வாளர் சோமசுந்தரம், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 15-ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், 16-ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், அரசு மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

-பி.கணேசன் @ இசக்கி.