ஏற்காடு பி.டி.ஓ விடம் அனைத்து கட்சியினர் மனு!

ye0511P3கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் மகர பூஷணம் ஆலோசணையின் பேரில் ஏற்காடு டவுண் பகுதிகளில் வைத்திருந்த சாலையோர கடைகளை நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் ஏற்காடு பி.டி.ஓ மற்றும் தாசில்தார் ஆகியோர் அகற்றினர்.

இதையடுத்து சாலையோர கடை வியாபாரிகள் பல்வேறு துறை அலுவலகத்திற்கு சென்று எந்த பயனும் இல்லாததால், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அங்கு காலை முதல் மதியம் வரை ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை, துணை சேர்மேன் சுரேஷ் குமார், தி.மு.க ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலு, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் பஞ்சநாதன், பி.ஜே.பி. புறநகர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் தலைமையில் பி.டி.ஓ அலுவலக வாயிலிலேயே ஆலோனை செய்தனர்.

பின்னர் பி.டி.ஓ.க்கள் ஜெயராமன் மற்றும் துளசிராமன் ஆகியோரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தங்கள் கடைகளை அகற்றியதால் தாங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் இருப்பதாகவும், எனவே தாங்கள் கடை வைத்திருந்த இடத்திலேயே மீண்டும் கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு மாதம் ரூ.600 வரை வாடகை செலுத்துவதாகவும் கூறினர்.

மனுவை பெற்றுக்கொண்ட பி.டி.ஓ.ஜெயராமன், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திடம் பேசிவிட்டு கூறுவதாக கூறினார்.

-நவீன் குமார்.