உத்திரகாண்ட் பேரிடர் நிதி : மனித நேயப்பணிகளில் மாணவர்கள்!

RFPhotos (3)

வாடியபயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன் என்று வள்ளலார் சொன்னார்.  காயமுற்ற புறாவுக்காக தன்னுடைய சதையையே அரிந்து கொடுத்தான் சிபின் சக்கரவர்த்தி, முல்லைக்கொடிக்காக தனது தேரைக் கொடுத்தான் பாரி ,இரண்டு வண்டுகள் இணைந்து இருப்பதை கண்டு அவற்றின் இன்பம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக தனது குதிரையின் அணிகலன்களையெல்லாம் கலைந்து அமைதியாக கடந்து வந்தான் ஒரு மன்னன். இது தமிழர்களின் வரலாறு. அந்த கொடைதிறன் இன்னும் நம்மிடம் குறைந்து போகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உத்தரகாண்டில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் , ஏலூர்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் கல்வி மையத்தில் பயிலும் மாணவ-மாணவிகள் வீடு வீடாக , கடைகடையாக சென்று நிதி திரட்டியுள்ளனர். ஜூன் மாதம் 25 முதல் 27- ந் தேதி வரை திரட்டிய நிதி ரூபாய். 4,500 /- இவற்றிற்கு உறுதுணையாக மேற்படி கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களும், பள்ளி மாணாக்கர்களும் மனித நேயத்துடன் இப்பணிக்கு உதவியுள்ளனர். அவர்கள் வசூலித்த நிதியை எமது உள்ளாட்சித்தகவல் செய்தியாளர் ப.தங்கராஜிடம் ஒப்படைத்தனர். அந்நிதியை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக மாற்றி உத்திரகாண்ட் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நமது செய்தியாளர் அனுப்பி வைத்துள்ளார். இதன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வு வெளிப்பட்டு இருக்கிறது. 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி தமிழகத்தை ஆழிப்பேரலை தாக்கியபோது உலகின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் உதவினார்கள். இப்போது உத்தரகாண்டில் நமது சகோதர சகோதரிகள் துன்ப வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கும் போது நம்மால் முடிந்தவரை நாமும் உதவுவோம். இல்லாமை வேறு, இயலாமை வேறு விரும்பாமை பாவம் என்ற அவ்வையின் தர்ம நெறியை மனதில் நிறுத்துவோம்.

RFPhotos (2)

RFPhotos (4)RFPhotos (1)

rp

கே.பி.சுகுமார்.

Leave a Reply