தமிழக மீனவர்களை எவ்வித வழக்குகளும் பதிவு செய்யாமல் விடுதலை செய்ய வலியுறுத்தி : பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

tn.cmதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 3 விசைப் படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை 3-தேதி அதிகாலை பிடித்துச்சென்றது. மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகுகள் கல்பிட்டியா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இதுபோன்று இலங்கை கடற்படையினர் அப்பாவி இந்திய மீனவர்களை சிறைபிடித்துச் சென்று தொந்தரவு செய்வது வாடிக்கையாகி விட்டது. இது மீனவ சமுதாயத்தினரிடையே பாதுகாப்பின்மை மற்றும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு மீனவ அமைப்புகளும் தமிழக அரசிடம் முறையிட்டுள்ளனர்.

சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இன்றி விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு எப்போதும் உறுதி அளிக்கிறது. எனவே, சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் மீதும் எவ்வித வழக்குகளும் பதிவு செய்யாமல் விடுதலை செய்ய இலங்கை அரசை தாங்கள் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply