ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், ராணுவ அமைச்சர் உள்ளிட்ட முக்கிய விவிஐபிகள் பயன்பாட்டுக்காக ரூ.3600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க கடந்த 2010ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த பின்மெக்கானிக்கா என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் கிடைப்பதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் அரசியல் புள்ளிகளுக்கு ரூ.360 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.
இந்த ஊழல் பூதாகரமாக வெடித்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ராணுவ அமைச்சர் அந்தோணி உத்தரவிட்டார். இதற்கிடையே, ஊழல் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை திரட்டவும், விசாரணை நடத்தவும் சிபிஐ அதிகாரிகள் குழு, கடந்த வாரம் இத்தாலி சென்றது.
புகார்கள் தொடர்பாக கிடைத்த சில ஆவணங்களுடன் சிபிஐ குழு நாடு திரும்பியது. அதன் அடிப்படையில் முதல்கட்ட விசாரணை அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்பட 6 பேர் மற்றும் 4 தனியார் நிறுவனங்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. எஸ்.பி. தியாகி, விமானப்படை தளபதியாக இருந்தபோது அவரை சந்தித்தவர்கள் யார், யார் என்பதை அறிந்து கொள்வதற்காக விமானப்படை விசிட்டர்ஸ் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு சிபிஐ கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் தியாகி மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.