நில மீட்பு, வறட்சியை எதிர்கொள்ளுதல் நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாடுகள் நிதி வழங்க வேண்டும் – இந்தியா அழைப்பு.

மங்கோலியாவின் உலான்பாதரில் பாலைவனமயமாதலைத் தடுப்பதற்கான ஐநா உடன்படிக்கையின் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான 17-வது மாநாடு இன்று நடைபெற்றது.  இதில் ஆரோக்கியமான நிலம், வறட்சியை எதிர்கொள்ளும் திறனுக்கான புதிய நிதிசார் வழிமுறைகள் என்ற தலைப்பில் அமைச்சர்கள் நிலையிலான உரையாடல் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட மத்தியச் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், நில மீட்பு, வறட்சியை எதிர்கொள்ளும் திறனுக்கான இந்தியாவின் புதிய, பல்வகைப்படுத்தப்பட்ட நிதிக் கட்டமைப்பை எடுத்துரைத்தார்.

நில மறுசீரமைப்பில் நீடித்த முதலீட்டின் அவசியம் குறித்து வலியுறுத்திய திரு யாதவ், நில மறுசீரமைப்பு என்பது செலவு கிடையாது, மாறாக அது உணவு, நீர், பல்லுயிர், வாழ்வாதாரங்கள், நீண்டகால மீள்திறனில் மேற்கொள்ளப்படும் ஒரு முதலீடாகும்  என்று தெரிவித்தார்.  பாலைவனமாதல், நிலச் சீரழிவு, வறட்சி ஆகியவற்றை எதிர்கொள்ள பொது பட்ஜெட்களுக்கு அப்பால், பல்வகைப்படுத்தப்பட்ட, மதிப்பிடக்கூடிய, நீடித்த நிதி ஆதாரங்களும் வலுவான பொது தனியார் கூட்டாண்மைகளும் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.  பருவநிலை மாற்றத்தை அணுகுதல், நீடித்த நிலப் பயன்பாடு, வனம், வேளாண்மை, காடு வளர்ப்பு, பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு நிதி வழங்க உதவும் இந்தியாவின் அரசு உதவி, தனியார் முதலீடுகள் ஆகிய நிதிக் கட்டமைப்பை அமைச்சர் எடுத்துரைத்தார்.

Leave a Reply