டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 11 ஆண்டுகால நிறைவு குறித்து இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நிர்வாகம், பொதுச் சேவை வழங்கல், குடிமக்களின் வாழ்க்கை ஆகியவற்றில் அது ஏற்படுத்தியுள்ள மாற்றத்தக்க தாக்கத்தை எடுத்துரைத்துள்ளார். டிஜிட்டல் இந்தியா, நிர்வாகத்தை மேலும் வெளிப்படையானதாகவும், திறன்மிக்கதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றி நாட்டின் அனைத்து துறை வளர்ச்சியையும் விரைவுபடுத்தி நிர்வாகத்திற்குப் புதிய வரையறையை ஏற்படுத்தியுள்ளதாக திரு மோடி கூறியுள்ளார். தடையற்ற மின்னணு பணப்பரிவர்த்தனைகள், வெளிப்படையான நேரடி பயன் பரிமாற்றங்கள் முதல் மின்னணு பொது உள்கட்டமைப்பின் விரிவாக்கம் வரை இந்த முன்முயற்சி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலித்துள்ளது என்றும் இது தொழில்நுட்பத்தை எளிமையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு சக்தி மிக்க கருவியாக மாற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பத்தை ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் அணுகுவது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது டிஜிட்டல் இந்தியாவை வளர்ச்சியடைந்த, தற்சார்புடைய இந்தியா ஆகியவற்றுக்கான வலுவான அடித்தளமாகச் செய்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் குறிப்பாக கிராமங்கள், 2-ம் நிலை நகரங்கள், 3-ம் நிலை நகரங்கள் ஆகியவற்றுக்கு கொண்டு சென்றுள்ளதாக திரு மோடி தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் உள்ள இளம் தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள், புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோர் உலகின் அதிக சவால்மிக்க சூழல்களை எதிர்கொள்வதற்கான நடைமுறைகளை உருவாக்கி வருவதாக அவர் கூறினார். இந்த முன்முயற்சி கல்வி, சுகாதாரம், வேளாண்மை, வர்த்தகம், பொதுச் சேவை விநியோகம் போன்ற முக்கிய துறைகளை வலுப்படுத்தி நிர்வாகத்தை மேலும் அணுகக் கூடியதாகவும், வெளிப்படையானதாகவும் திறன் மிக்கதாகவும் மாற்றியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவில் வளர்ந்து வரும் தலைமைத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ள திரு மோடி, செயற்கை நுண்ணறிவு, செமிக்கண்டக்டர்கள், குவாண்டம் கணினி போன்ற துறைகளில் நாட்டின் வளர்ச்சி புதிய வழிவகைகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என்று கூறினார். தொழில்நுட்பம், மனித சமூகத்திற்கு சேவையாற்றி, அனைத்து குடிமக்களுக்கும் அதிகாரம் அளித்து, நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான அரசின் அர்ப்பணிப்பை அவர் உறுதிபடுத்தினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி தொடங்கப்பட்டதன் 11-வது ஆண்டு நிறைவை நாம் இன்று குறிப்பிடுகிறோம். இந்த முன்முயற்சி நிர்வாகத்தை மறு வடிவமைத்து, குடிமக்களுக்கு அதிகாரமளித்து அனைத்துத் துறை வளர்ச்சியையும் விரைவுபடுத்தியுள்ளது. இது வாழ்க்கையின் அனைத்து அம்சத்தையும் பிரதிபலித்துள்ளது.”
எம்.பிரபாகரன்
