உள்நாட்டு பாதுகாப்புத் தளவாடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் யந்த்ரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆலையில் அதிநவீன 10,000 டன் அலுமினிய இயந்திரத்திற்கான பூமி பூஜையை அம்மாநில முதலமைச்சர் திரு தேவேந்திர பட்நாவிசுடன், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இணைந்து நடத்தினார்.
சில முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் தளவாடங்களுக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் வகையில் அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் சூழலில் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இத்தகைய சூழலில் இது போன்ற இயந்திரத் தளவாடங்களை நிறுவும் நடவடிக்கைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ நிலைகள், விண்வெளித் திட்டங்கள், விமானக் கட்டமைப்புப் பணிகள், ஏவுகணைத் திட்டங்கள், ரயில்வே, போக்குவரத்துத் துறைகள் உள்ளிட்ட முக்கியத் தொழில்துறைப் பயன்பாட்டிற்குத் தேவையான அதிமுக்கியத்துவம் வாய்ந்த அலுமினிய கலவை வடிவங்களை உற்பத்தி செய்ய இது உதவிடும் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா
