பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பு.

பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு மேக்ரோனும் நிகழ்ச்சியில் உரையாற்றினர். அதிபர் மேக்ரோன் நிகழ்வுக்கு வருகை தந்தமைக்குப் பிரதமர் நன்றி தெரிவித்ததோடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவும் பிரான்சும் உறுதியான நிலையில் கூட்டாகச் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இச்சூழலில், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு போன்ற இந்திய-பிரான்ஸ் முன்முயற்சிகளையும், செயற்கை நுண்ணறிவு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை, பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகிய முன்முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். தற்போது நடைபெற்றுவரும் இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டைக் குறிப்பிட்ட பிரதமர், உலக நன்மைக்காக உழைப்பதில் இரு நாடுகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ மற்றொரு மைல்கல் என்று கூறினார். இந்தியாவில் நடைபெறும் புத்தொழில் புரட்சியை அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் கிராமப்புற மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஆற்றலையும், நிலையான வாழ்விற்கான மேம்பட்ட உற்பத்தியையும், தூய்மையான வளர்ச்சிக்கான பசுமை ஹைட்ரஜன், மின்கலத் தொழில்நுட்பங்கள், மின்சார வாகனப் போக்குவரத்தையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

டிஜிட்டல் யுகத்தில் நடைபெற்று வரும் தொழில்நுட்பப் புரட்சி, மனிதகுலத்திற்குப் புதிய வாய்ப்புகளை அளிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், பாரத் இன்னோவேட்ஸ் நிகழ்விற்கு வந்துள்ள கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோரை, நம்பகமான, அனைவரையும் உள்ளடக்கிய, மனித குலத்தை மையமாகக் கொண்ட தொழில்நுட்பங்களை உருவாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். புத்தொழில் நிறுவனங்கள் அவற்றின் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டும் மதிப்பிடப்படாமல், அதே அளவிற்கு அவை மனிதகுலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையிலும் மதிப்பிடப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதுவே பாரத் இன்னோவேட்ஸின் மையச் செய்தி என்று குறிப்பிட்ட அவர், உலகளாவிய புத்தாக்கத்தின் அடுத்த அத்தியாயத்தை இணைந்து உருவாக்க இந்தியாவுடன் கைகோர்க்குமாறு அங்கிருந்தவர்களை அழைத்தார். குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள், உயிரித் தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சுகாதாரம், மருத்துவத் தொழில்நுட்பம், தூய்மையான எரிசக்தி, பிற முன்னணித் துறைகளைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனத்தினருடனும் கண்டுபிடிப்பாளர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார். தலைவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டதோடு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள், உயிரித் தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சுகாதாரம், மருத்துவத் தொழில்நுட்பம், மேம்பட்ட பொருட்கள், தூய்மையான எரிசக்தி, பிற முன்னணித் துறைகளைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனத்தினருடனும் கண்டுபிடிப்பாளர்களுடனும் கலந்துரையாடினர்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்தியாவை ஒரு உலகளாவிய புத்தாக்க மையமாக மாற்றுவதிலும், உலகளாவிய தொழில்நுட்பத் துறைக்குப் பங்களிப்பதில் இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்திலும் மத்திய அரசின் உறுதியான அர்ப்பணிப்பை ‘பாரத் இன்னோவேட்ஸ்’ எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply