பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளுக்காக, விமான எரிபொருள் விலையை நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடிக்கு மிகாத ஒருமுறை நிதி ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மூலம், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு வட்டியில்லா முன்பணமாக வழங்கப்படும். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக, எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களை சந்திக்க விமான நிறுவனங்களுக்கு நிலையான விமான எரிபொருள் விலை நிர்ணயத்தை எளிதாக்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.
மத்திய அமைச்சரவைக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விலை நிலைப்படுத்தல் நிதியின் முக்கிய அம்சங்கள்:
திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களின் விமான எரிபொருள் விலை நிலைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி வரை, ஒருமுறை நிதி ஆதரவு வட்டியில்லா முன்பணமாக வழங்கப்படும். சர்வதேச அளவில் நிலவும் சூழல் காரணமாக, விமான எரிபொருள் விலைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு, இந்த நிதியம் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கும்.
சர்வதேச அளவில் விலைகள் குறையும் போது, வேறுபாட்டுத் தொகை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடமிருந்து மீட்கப்பட்டு, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு அனுப்பப்படும்.
விருப்பமுள்ள அனைத்து இந்திய விமான நிறுவனங்களுக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி கிடைக்கும்.
இந்த வழிமுறை, உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளுக்கு ஒரு நிலையான விலை நிர்ணய ஏற்பாட்டைப் பின்பற்றுவதன் மூலம் எரிபொருள் செலவுகளில் அதிக முன்கணிப்பை வழங்குகிறது. இதன் மூலம், அவ்வப்போது எரிபொருள் விலை உயர்வுகளால் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.
இந்திய விமான நிறுவனங்களுக்கும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
எம்.பிரபாகரன்
