அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று, 140 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா, ‘பசுமை உலக’ மாற்றத்திற்கான திறவுகோலைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய உலகளாவிய மாற்றத்தில் இந்தியா ஒரு தீர்க்கமான கட்டத்தில் நிற்கிறது என்றும், அதை வடிவமைப்பதில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகிக்கும் சிறந்த நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
10வது நிலையான வணிக எதிர்கால உச்சி மாநாடு 2026-ல் உரையாற்றிய அவர், உலகின் மக்கள்தொகையில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளதால், உலகளாவிய பசுமை மாற்றத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதில் இந்தியாவின் முன்னேற்றம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறினார். பசுமைத் தொழில்நுட்பங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி அமைப்புகளால் இயக்கப்படும் நிலையான வளர்ச்சியின் ஒரு முக்கிய உலகளாவிய உந்து சக்தியாக இந்தியா உருவெடுப்பதற்கு இது ஒரு பொறுப்பையும் வாய்ப்பையும் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கும், அதன் உலகளாவிய தலைமைத்துவப் பார்வைக்கும் பசுமை உள்கட்டமைப்பு ஒரு மையத் தூணாக அமையும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரம், மறுசுழற்சி, புனரமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை இந்த வளர்ந்து வரும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப சீரமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தைக் குறிப்பிட்ட அவர், வேகமாக விரிவடைந்து வரும் புத்தாக்கச் சூழலமைப்பின் ஆதரவுடன் நாடு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது என்றார். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களுடன், இந்தியா தற்போது உலகளவில் முன்னணி புத்தொழில் நிறுவனச் சூழலமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்றும், அவற்றில் ஏறக்குறைய பாதி நிறுவனங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து உருவாகின்றன என்றும், இது நாடு முழுவதும் தொழில்முனைவோர் அபிலாஷைகளில் ஏற்பட்டுள்ள பரவலான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
தரவு மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற, நம்பகமான, 24 மணி நேர ஆற்றல் விநியோகம் தேவைப்படும் வளர்ந்து வரும் துறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா தனது தூய்மையான ஆற்றல் சூழலமைப்பை சீராக விரிவுபடுத்தி வருவதாக அமைச்சர் கூறினார். இச்சூழலில், அவர் சாந்தி சட்டத்தைக் (இந்தியாவின் அணுசக்தி மாற்றத்தை நீடித்த முறையில் பயன்படுத்துதல் மற்றும் விரைவுபடுத்துதல்) குறிப்பிட்டார். அச்சட்டம், தனியார் நிறுவனங்கள் உட்பட பரந்த பங்கேற்பிற்காக அணுசக்தித் துறையைத் திறந்து, தூய்மையான மற்றும் நம்பகமான ஆற்றல் உற்பத்திக்கு புதிய வழிகளை உருவாக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்று அவர் விவரித்தார்.
திவாஹர்
