18.02.2026 நிலவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா (PMJJBY) திட்டத்தின் கீழ் உள்ள மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 26,79,81,084, தற்போதுள்ள பாலிசிகளின் எண்ணிக்கை 12,55,58,532 ஆகும்.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் உரிமைகோரல் தீர்வு விகிதம் 18.2.2026 நிலவரப்படி 99.95% ஆகும். காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை அமைப்பான இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) தகவல்படி, இந்தத் திட்டத்தின் உரிமைகோரல்களுக்குத் தீர்வு காண சராசரி நேரம் 0.61 நாட்கள் முதல் 17 நாட்கள் வரை ஆகும்.
இந்தத் திட்டத்தில் சேர்க்கைகளை அதிகரிப்பதற்கும், காலாவதிகளைக் குறைப்பதற்கும், பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் பலன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பாலிசி காலதாமதங்களைக் குறைக்க, நிதிச் சேவைகள் துறை புதுப்பித்தல் சுழற்சிக்கு முன் ஒரு வருடாந்திர செயல் திட்டத்தை வெளியிடுகிறது, இது செயல்படுத்தும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு கவுன்சில் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அனைத்து வங்கிகள், தபால் நிலையங்கள், காப்பீட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதற்காக இதுபோன்ற சமீபத்திய செயல் திட்டம் 13.05.2025 அன்று வெளியிடப்பட்டது.
சமீபத்தில், நாடு முழுவதும் 01.07.2025 முதல் 31.10.2025 வரை 2.70 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs) 4 மாத “நிதி உள்ளடக்க செறிவூட்டல் இயக்கம்” தொடங்கப்பட்டது.
தடையற்ற பதிவு மற்றும் கோரிக்கை அனுப்புதல் மூலம் பயனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் ஜன்சுரக்ஷா தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து 12 பொதுத்துறை வங்கிகள், 28 பிராந்திய கிராமப்புற வங்கிகள், 13 காப்பீட்டு நிறுவனங்கள் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், உரிமைகோரல் தீர்வு செயல்முறை உட்பட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு, ஜன்சுரக்ஷா தளம் ( www.jansuraksha.gov.in ) இந்தத் திட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழிகளில் வழங்குகிறது.
இந்தத் தகவலை நிதித் துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்
