யந்திரா இந்தியா நிறுவனத்திற்கு ‘மினிரத்னா’வகை-I அந்தஸ்து வழங்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒப்புதல்.

பாதுகாப்புத் துறையில் பொதுத்துறை நிறுவனமாகத் திகழும், யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ‘மினிரத்னா’ வகை-I அந்தஸ்து வழங்க பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ஒப்புதல் அளித்துள்ளார். ஒரு அரசு அமைப்பிலிருந்து குறுகிய காலத்தில், அதாவது சுமார் நான்கு ஆண்டுகளில், லாபம் ஈட்டும் ஒரு பெருநிறுவனமாக மாறியதற்காக இந்த  நிறுவனத்திற்கு  வாழ்த்து தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர், நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கும், உள்நாட்டுமயமாக்கலை அதிகப்படுத்துவதற்கும், மினிரத்னா (வகை-I) அந்தஸ்து வழங்குவதற்கான பிற செயல்திறன் அளவுகோல்களைப் பூர்த்தி செய்வதற்கும் நிறுவனத்தின்  நிர்வாகம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து திருப்தி தெரிவித்தார்.

யந்திரா நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து குறிப்பிடத்தக்க சாதனைகளை எட்டியுள்ளது. இதில், 2021-22 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ரூ. 956.32 கோடியாக இருந்த விற்பனை, 2024-25 நிதியாண்டில் ரூ. 3,108.79 கோடியாக உயர்ந்தது ஒரு முக்கிய சாதனையாகும். ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2021-22 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பூஜ்ஜியமாக இருந்த ஏற்றுமதி, 2024-25 நிதியாண்டில் ரூ. 321.77 கோடியாக உயர்ந்துள்ளது.

 கார்பன் ஃபைபர் கலவைகள், நடுத்தர மற்றும் பெரிய ரக வெடிமருந்துகளுக்கான இணைப்புப் பொருட்கள், கவச வாகனங்களுக்கான இணைப்புப் பொருட்கள், பீரங்கித் துப்பாக்கிகள், பிரதான போர் டாங்கிகளுக்கான  இணைப்புப் பொருட்கள், கண்ணாடி கலவைகள், அலுமினிய உலோகக் கலவைகள் போன்றவை இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு பொருட்கள் ஆகும்.

Leave a Reply