மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா புதுதில்லியில் நிர்மாண் பவனில் இன்று உலக உணவு ஒழுங்குமுறை உச்சிமாநாட்டிற்கான சின்னம் மற்றும் கையேட்டை வெளியிட்டார். இந்த உச்சிமாநாடு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு நட்டா, இந்த ஆண்டுக்கான உச்சிமாநாடு, வளர்ந்து வரும் உணவு பழக்கவழக்கங்கள் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் என்றார். தரமான உணவிற்கும், சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர்பை அவர் விவரித்தார். உணவு என்பது வெறும் ஊட்டச்சத்திற்கு மட்டுமல்ல, நல்வாழ்வு, மன ஆரோக்கியம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வடிவமைக்கும் ஆற்றல் உடையது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துவதில், இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிலைய ஆணையத்தின் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். நமது உணவு முறை ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாறிவரும் உணவுப்பழக்கமுறை, சந்தை உணவு விநியோக முறை குறித்து அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் உணவுப் பாதுகாப்பு தரநிலைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அதற்கு தகுந்தபடி புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் திரு நட்டா வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா
