தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-ம் ஆண்டை கொண்டாடும் வகையில் புதுதில்லி பாரத் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதர அரசு பிரதிநிதிகள் பங்கேற்ற இல்லந்தோறும் மூவண்ணக் கொடி இருசக்கர பேரணியை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இப்பேரணி, நாட்டின் பெருமை, ஒற்றுமை, மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை வலியுறுத்தி, பாரத் மண்டபத்திலிருந்து மேஜர் தயான் சந்த் தேசிய மைதானம் வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர், வந்தே மாதரம் பாடல் தாய்நாட்டின் மீதான அன்பை தேசியக் கடமையாக மாற்றி இந்திய சுதந்திரப் போராட்ட உணர்வின் வலிமைமிக்க வெளிப்பாடாக அமைந்தது என்று தெரிவித்தார். அதனுடைய, காலத்தால் அழியாத வார்த்தைகள் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு துணிச்சல், தியாகம், நம்பிக்கை ஆகியவற்றை எவ்வாறு அளித்தன என்பதை நினைவுகூர்ந்தார்.
தாம் அண்மையில் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டது குறித்து நினைவுகூர்ந்த குடியரசு துணைத்தலைவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு, வரலாற்றுச் சிறப்புமிக்க செல்லுலார் சிறை ஆகியவற்றுக்குச் சென்றது நெகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார். 1943-ல் மூவண்ணக் கொடியை நேதாஜி ஏற்றியது குறித்தும் செல்லுலார் சிறையில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் குறித்தும் நினைவுகூர்ந்த அவர், பலர் வந்தே மாதரம் என்று முழங்கி தூக்குமேடைக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நாடு முழுவதும் வந்தே மாதரம் என்ற தேசியப் பாடல் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துரைத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களும், தலைவர்களுமான வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் ஆகியோரின் பங்களிப்புகளையும், தியாகங்களையும் நினைவுகூர்ந்தார் அத்துடன் வந்தே மாதரம் பாடலின் உணர்வையும், அதன் செய்தியையும் மக்களிடையே பரப்பிய தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார் குறித்தும் குறிப்பிட்டார்.
திவாஹர்
