ஐஐடி ரூர்க்கி பட்டமளிப்பு விழாவில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரை.

ரூர்க்கியில் உள்ள ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்,  புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறை தீர்வு  மற்றும் ஓய்வூதியத் துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். 

பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியா முழுவதும் உள்ள 1.7 லட்சம் புத்தொழில் நிறுவனங்களில், ஐஐடி ரூர்க்கியின் 240 புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்றும், நாட்டின்  வளர்ச்சியில் இவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்றும்  கூறினார்.

1847 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐஐடி ரூர்க்கியை ஆசியாவின் முதல் பொறியியல் கல்லூரி என்றும், ஆராய்ச்சி, புத்தாக்கம்  மற்றும் சமூக ஈடுபாட்டை ஒருங்கிணைக்கும் ஒரு முன்மாதிரி  நிறுவனம் என்றும் அவர் பாராட்டினார்.

நேற்று வெளியிடப்பட்ட என்ஐஆர்எப்  மதிப்பீட்டில் கூட, ஐஐடியாக மாறுவதற்கு முன்பு ரூர்க்கி பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்ட இந்த நிறுவனம், நாட்டில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

பல தளங்களில் ஐஐடி ரூர்க்கியின் பெருமையை புகழ்ந்துரைத்த அமைச்சர், தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக “இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் மிகவும் புதுமையான நிறுவன விருது”, “STEM  ( அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்)  துறையில் சிறந்து விளங்குவதற்கான விரைவு சக்தி சாதனையாளர் விருது” ஆகியவற்றையும் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். சமீபத்திய தேசிய தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்ததற்காக நிறுவனத்தை அவர் பாராட்டினார்.

ஐஐடியின் பல்துறை கல்வி மற்றும் புவியியல் இருப்பிடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பேரிடர் மேலாண்மை முதல் நறுமணப் பொருளாதாரம் வரையிலான பெரும்  ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.

உயிரி தொழில்நுட்பம்,  விண்வெளி, அணுசக்தி மற்றும் இமயமலை வளங்களில் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்து அமைச்சர் விவரித்தார். அடுத்த தொழில்துறை புரட்சி உயிரி தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கட்டுமானப் பொறியியல் மற்றும் பேரிடர் மேலாண்மையில் சிறந்து விளங்கும்  அதே வேளையில், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மீளுருவாக்கச் செயல்முறைகள் போன்ற புதிய களங்களை ஆராயுமாறு அவர் நிறுவனத்தை வலியுறுத்தினார்.

Leave a Reply