பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் நான்கு திட்டங்களுக்கு மொத்தம் 12,328 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் பின்வருவன அடங்கும்: –
(1) தேஷால்பர்-ஹாஜிபிர்-லூனா மற்றும் வாயோர்-லக்பட் புதிய பாதை
(2) செகந்திராபாத் (சனத்நகர்)- வாடி 3-வது, 4-வது பாதை
(3) பகல்பூர் – ஜமால்பூர் 3-வது பாதை
(4) ஃபர்கேட்டிங் – நியூ தின்சுகியா இரட்டை ரயில் பாதை
பயணிகள், சரக்குகள் ஆகிய இரண்டின் தடையற்ற, விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதை மேற்கண்ட திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தத் திட்டங்கள் பயண வசதியை மேம்படுத்துவதோடு, சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைக்கும். இந்தத் திட்டங்கள் அதன் கட்டுமானத்தின் போது சுமார் 251 லட்சம் மனித நாட்கள் நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும்.
குஜராத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பாதை, கட்ச் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிக்கு இணைப்பை வழங்கும். திட்டத்தின் நிறைவுக்கான காலக்கெடு 3 ஆண்டுகள் ஆகும். இது குஜராத் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, உப்பு, சிமெண்ட், நிலக்கரி போன்றவற்றின் போக்குவரத்திற்கும் உதவும். இதில் 13 புதிய ரயில் நிலையங்கள் சேர்க்கப்படும். இதனால் 866 கிராமங்கள், சுமார் 16 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.
இந்த திட்டங்கள் விநியோகத் தொடரை மேம்படுத்தி, அதன் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திவாஹர்
