“விண்வெளித் துறையில் சாதனைக்குப் பின் சாதனைகளை எட்டுவது இந்தியா மற்றும் அதன் விஞ்ஞானிகளின் இயல்பான பண்பாக மாறிவிட்டது” என்று திரு மோடி கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா சந்திரனின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக மாறி, வரலாற்றை உருவாக்கியதை நினைவு கூர்ந்த பிரதமர், விண்வெளியில் டாக்கிங்-அன்டாக்கிங் திறன்களைக் கொண்ட உலகின் நான்காவது நாடாகவும் இந்தியா மாறியுள்ளது என்பதை விளக்கினார். மூன்று நாட்களுக்கு முன்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றிய குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவைச் சந்தித்ததாகவும், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்ததாகவும் அவர் தெரிவித்தார். குரூப் கேப்டன் சுக்லா தமக்கு மூவண்ணக் கொடியைக் காட்டியபோது, அதைத் தொட்ட உணர்வு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் கூறினார். குரூப் கேப்டன் சுக்லாவுடனான தமது உரையாடலில், புதிய இந்தியாவின் இளைஞர்களின் எல்லையில்லா தைரியத்தையும் எல்லையற்ற கனவுகளையும் கண்டதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்தக் கனவுகளை முன்கூட்டியே நனவாக்குவதற்காக, இந்தியா ஒரு “விண்வெளி வீரர் குழுவைத்” உருவாக்கி வருவதாக பிரதமர் அறிவித்தார். விண்வெளி தினத்தன்று, இளைஞர்கள் இந்தக் குழுவில் சேர்ந்து இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்ற உதவுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
“இந்தியா செமி-கிரையோஜெனிக் என்ஜின்கள் மற்றும் மின்சார உந்துவிசை போன்ற திருப்புமுனை தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில், இந்திய விஞ்ஞானிகளின் அயராத முயற்சிகள் மூலம் இந்தியா ககன்யான் திட்டத்தைத் தொடங்கும், வரும் ஆண்டுகளில், இந்தியா அதன் சொந்த விண்வெளி மையத்தை நிறுவும்” என்று பிரதமர் பெருமிதத்துடன் கூறினார். இந்தியா ஏற்கனவே சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை எட்டிவிட்டது, இப்போது விண்வெளியின் மற்ற பகுதிகளை ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த ஆராயப்படாத பகுதிகள் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான முக்கிய ரகசியங்களை வைத்திருக்கின்றன என்று கூறிய பிரதமர், “விண்மீன் திரள்களுக்கு அப்பால் நமது அடிவானம் உள்ளது!” என்றார்.
விண்வெளியின் எல்லையற்ற விரிவு, எந்த இலக்கும் எப்போதும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். அதேபோல், விண்வெளித் துறைக்குள் கொள்கை அளவிலான முன்னேற்றத்தில் இறுதியான நிலை இருக்கக்கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார். செங்கோட்டையில் இருந்து ஆற்றிய தமது உரையை நினைவு கூர்ந்த பிரதமர், இந்தியாவின் பாதை சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். கடந்த பதினொரு ஆண்டுகளில், நாடு விண்வெளித் துறையில் தொடர்ச்சியான பெரிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். விண்வெளி போன்ற எதிர்காலத் துறைகள் ஏராளமான கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது என்பதைக் குறிப்பிட்ட திரு. மோடி, இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன என்றும், தனியார் துறை விண்வெளி தொழில்நுட்பத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இன்றைய திட்டத்தில் தீவிரமாக பங்கேற்பதன் மூலம், இன்று 350-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தில் புத்தாக்கம் மற்றும் உந்துசக்திக்கான இயந்திரங்களாக உருவாகி வருகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தனியார் துறையால் உருவாக்கப்பட்ட முதல் பிஎஸ்எல்வி ராக்கெட் விரைவில் ஏவப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இந்தியாவின் முதல் தனியார் தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் உருவாக்கத்தில் உள்ளது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பொது-தனியார் கூட்டாண்மை மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார். “விண்வெளித் துறையில் இந்தியாவின் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 15, 2025 அன்று செங்கோட்டையில் இருந்து தாம் ஆற்றிய உரையை நினைவு கூர்ந்த பிரதமர், பல துறைகளில் தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஒவ்வொரு துறையும் அதன் சொந்த இலக்குகளை நிர்ணயிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இந்தியாவின் விண்வெளி “அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ஐந்து யூனிகான்களை உருவாக்க முடியுமா?” என்று புத்தொழில் நிறுவனங்களை நோக்கி திரு மோடி கேட்டார். தற்போது, இந்தியா தனது மண்ணிலிருந்து ஆண்டுதோறும் 5–6 பெரிய ஏவுதல்களைக் காண்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகள் ஏவப்படும் நிலையை இந்தியா அடையும் வகையில் தனியார் துறை முன்னேற வேண்டும் என்ற தமது விருப்பத்தை பிரதமர் வெளிப்படுத்தினார். இந்தத் தொலைநோக்கு பார்வையை அடைய தேவையான அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை செயல்படுத்தும் நோக்கத்தையும் மன உறுதியையும் அரசு கொண்டுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தினார். விண்வெளி சமூகத்தினருக்கு அரசு ஒவ்வொரு கட்டத்திலும் உறுதியாக நிற்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
விண்வெளி தொழில்நுட்பத்தை அறிவியல் ஆய்வுக்கான ஒரு கருவியாக மட்டுமல்லாமல், வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு வழியாகவும் இந்தியா கருதுகிறது என்று பிரதமர் கூறினார். “விண்வெளி தொழில்நுட்பம் இந்தியாவில் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக அதிகரித்து வருகிறது” என்று, பயிர் காப்பீட்டுத் திட்டங்களில் செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடு, மீனவர்களுக்கான செயற்கைக்கோள் மூலம் செயல்படுத்தப்பட்ட தகவல் மற்றும் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை பயன்பாடுகள் மற்றும் பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந் திட்டத்தில் புவிசார் தரவுகளைப் பயன்படுத்துதல் போன்ற உதாரணங்களை மேற்கோள் காட்டி திரு மோடி கூறினார். விண்வெளியில் இந்தியாவின் முன்னேற்றம் அதன் மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதற்கு நேரடியாகப் பங்களிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மத்திய மற்றும் மாநில அரசுகளில் விண்வெளி தொழில்நுட்ப பயன்பாட்டை மேலும் ஊக்குவிப்பதற்காக, தேசிய சந்திப்பு 2.0 நேற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். இதுபோன்ற முயற்சிகள் தொடரவும் விரிவுபடுத்தப்படவும் அவர் விருப்பம் தெரிவித்தார். பொது சேவையை நோக்கமாகக் கொண்ட புதிய தீர்வுகள் மற்றும் புதுமைகளை உருவாக்க விண்வெளி புத்தொழில் நிறுவனங்களை பிரதமர் ஊக்குவித்தார். வரும் காலங்களில் இந்தியாவின் விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும் என்ற நம்பிக்கையுடன் அவர் தமது உரையை நிறைவு செய்தார். மேலும் தேசிய விண்வெளி தினத்தில் அனைவருக்கும் மீண்டும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திவாஹர்
