தங்களின் தர்மத்தின் அடிப்படையில் அப்பாவி பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளை நமது பாதுகாப்பு படைகள் அவர்கள் கர்மாவின்படி அழித்து விட்டன: பாதுகாப்பு அமைச்சர்.

பஹல்காமில் அப்பாவி மக்களைக் கொன்ற பயங்கரவாதிகளையும், அவர்களது மறைவிடங்களையும் நமது ஆயுதப் படைகள், ஆபரேஷன் சிந்தூர் மூலம் அழித்து விட்டதாக  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தகர்க்கும் போது நமது ஆயுதப் படைகள் பொறுமையையும், நிதானத்தையும் வெளிப்படுத்தியதாக தெரிவித்தார். எந்த பொதுமக்களும் பாதிக்கப்படாத வகையில் முழுமையான எச்சரிக்கையுடன் ஆயுதப்படைகள் நடந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியின் கீழ் ஆயுதப் படைகள் சுதந்திரமாகவும், எதிர்காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து வகை நடவடிக்கைகளையும் எடுக்கும் வல்லமை பெற்றது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

பழங்குடியின மக்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை சுட்டிக்காட்டிய திரு ராஜ்நாத் சிங், பிரதமரின் பழங்குடி மேம்பாட்டுத் திட்டம், திறன் இந்தியா, தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு பிரச்சாரம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை  எடுத்துரைத்தார். இந்தத் திட்டங்கள் பழங்குடியின மக்களை கண்ணியத்துடனும், வாய்ப்புகளுடனும், தேசிய வளர்ச்சியின் கீழ் கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கைகள் என்றும் அவர் கூறினார்.  “காலனித்துவ ஆட்சியின் போது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், இன்று நிலையான வளர்ச்சியின் பாதுகாவலர்களாக அவர்கள் மாறுவதற்கு நமது பழங்குடி சகோதர சகோதரிகள் நீண்ட தூரம் வந்துவிட்டதாகவும், அவர்களை மேலும் முன்னேற்றம் அடையச் செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply