குஜராத் மாநிலம் ஆனந்தில் தேசிய அளவில் முதலாவது கூட்டுறவு பல்கலைக்கழகமான திரிபுவன் கூட்டுறவுப் பல்கலைக்கழகத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா நாளை (2025 ஜூலை 5) அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், சட்டப்பேரவைத் தலைவர் திரு சங்கர் சவுத்ரி, மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு கிருஷன் பால் குர்ஜார், மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு ஜெகதீஷ் விஸ்வகர்மா, திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜெ எம் வியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
கூட்டுறவு, புதிய கண்டுபிடிப்பு, வேலைவாய்ப்பு, ஆகியவற்றின் சங்கமத்தை நோக்கிய முக்கியமான நடவடிக்கையாக இந்தப் பல்கலைக்கழகம் இருக்கும். இந்தப் பல்கலைக்கழகம், கூட்டுறவு நிர்வாகம், நிதி, சட்டம் மற்றும் ஊரக மேம்பாடு, போன்ற துறைகளில் தனிச்சிறப்பு மிக்க கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி வசதிகளை வழங்கும்.
அடிக்கல் நாட்டுவிழாவையொட்டி தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ், மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்பார். கூட்டுறவின் கோட்பாடுகள் மற்றும் இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் தாக்கம் ஆகியவை குறித்து பள்ளி மாணவர்களிடையே கருத்துருவாக்கம் செய்வதற்காக என்சிஇஆர்டி தயாரித்துள்ள பாடத்தொகுப்பையும் அவர் வெளியிடுவார்.
திவாஹர்
