சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தனது தொடர்ச்சியான நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), வடகிழக்கில் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்துள்ளது. இதன் விளைவாக, இப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சட்டவிரோத தெரு மதிப்பு பல நூறு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. உளவுத்துறையின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் பல இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இடைமறிப்புகள் மூலம் ஒரு பெரிய அளவிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள் 15.09.2026 அன்று அசாம் மற்றும் திரிபுராவின் பல்வேறு இடங்களில் , பெருமளவு மெத்தம்பெட்டமைன் மாத்திரைகளைக் கொண்டு செல்வதாகச் சந்தேகிக்கப்பட்ட நான்கு லாரிகளை இடைமறித்தனர்.
15.09.26 அன்று, முதல் நடவடிக்கையில், அசாம் ரைபிள்ஸின் 38 பட்டாலியனின் உதவியுடன், சில்சாரிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள அசாமின் ராம்நாத்பூரில், சந்தேகத்திற்குரிய லாரிகளில் ஒன்று அடையாளம் காணப்பட்டு வழிமறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதே போன்ற சரக்குகளை ஏற்றிச் சென்ற இரண்டாவது சந்தேகத்திற்குரிய லாரியும் அப்பகுதியில் கண்டறியப்பட்டது. இருப்பினும், அந்த வாகனத்தில் ஓட்டுநரோ அல்லது உதவியாளரோ இல்லை.
முதல் லாரியைச் சோதனையிட்டதில், ஓட்டுநர் இருக்கையின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் எனச் சந்தேகிக்கப்படும் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற மாத்திரைகள் அடங்கிய, மொத்தம் 55 கிலோ எடையுள்ள 275 பொட்டலங்கள் மீட்கப்பட்டன. இரண்டாவது லாரியை விரிவாகச் சோதனையிட்டதில், ஓட்டுநர் இருக்கையின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, அதே நிறத்திலான 54.2 கிலோ எடையுள்ள 271 பொட்டல மாத்திரைகள் மீட்கப்பட்டன. மொத்தம் 109.2 கிலோ எடையுள்ள, மெத்தம்பெட்டமைன் எனச் சந்தேகிக்கப்படும் மாத்திரைகள் , போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் இரண்டு வாகனங்களுடன் சேர்த்து மீட்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதே நேரத்தில், அதே உளவுத்துறை சார்ந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிமெண்ட் சுமை இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோவாயிலிருந்து அகர்தலா நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு இலக்கு வைக்கப்பட்ட சரக்கு வாகனம், அகர்தலாவிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள டெலியமுராவில், 28 பட்டாலியன், அசாம் ரைபிள்ஸின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வழிமறிக்கப்பட்டது. விரிவான பரிசோதனையின் விளைவாக, ஓட்டுநர் அறையின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் 72.6 கிலோ இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற மாத்திரைகள் அடங்கிய 295 பிளாஸ்டிக் பொட்டலங்கள் மீட்கப்பட்டன. கடத்தல் பொருட்களும் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின் போது கிடைத்த மேலதிக உளவுத் தகவல்கள் மற்றும் டி.ஆர்.ஐ அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையின் விளைவாக, திரிபுராவின் பனிசாகர் அருகே அதே கும்பலுக்குச் சொந்தமான மற்றொரு லாரி வழிமறிக்கப்பட்டது . அந்த வாகனத்தைச் சோதனையிட்டதில், அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ சந்தேகத்திற்கிடமான மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் மீட்கப்பட்டன . கடத்தல் பொருட்களும் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
DRI-யின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் விளைவாக, மொத்தம் 231.8 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர் . கடத்தல் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட நான்கு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சில்சார் மற்றும் மிசோரம் அருகே DRI மேற்கொண்ட இரண்டு உளவுத்துறை சார்ந்த நடவடிக்கைகளில், பல்வேறு இடங்களில் வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 76 கிலோ மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன
திவாஹர்
