புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்பது கிராமப்புற பொருளாதாரத்துக்கு வலுவூட்டும்! – டாக்டர் ஜிதேந்திர சிங்.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அடித்தட்டு நிலை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் திறமைகளை ஊக்குவித்தால், இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் வளர்ந்து, நகரம்-கிராமம் இடையிலான வளர்ச்சி வேறுபாடு குறையும் என்று கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய பயிலரங்கில்  பேசிய அவர், கிராமங்களில் உள்ள மக்களின் பாரம்பரிய அறிவு, உள்ளூர் திறன்கள் மற்றும் நடைமுறை அனுபவங்களில் இருந்து பல பயனுள்ள புதுமைகள் உருவாகின்றன என்றார். இவர்கள் முறையான கல்வி இல்லாவிட்டாலும், சிறந்த சிந்தனைத் திறன் கொண்டவர்கள் என்றும் பாராட்டினார்.

இந்த புதிய கண்டுபிடிப்பாளர்களை அறிவியல் நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை வாய்ப்புகளுடன் இணைத்தால், அவர்களின் கண்டுபிடிப்புகள் பெரிய அளவில் பயன்படக்கூடிய தயாரிப்புகளாக மாறும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு , உணவு பதப்படுத்தல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பாரம்பரிய அறிவுடன் இணைத்தால், உள்ளூர் பொருட்களின் மதிப்பும் வருமானமும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பல்வேறு  திட்டங்கள், பாரம்பரிய திறமைகளை பாதுகாத்து, அவற்றை தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்புகளுடன் இணைக்க உதவுகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்த முயற்சிகள் மூலம் கிராமப்புற மக்களும் இந்தியாவின் வளர்ச்சியில் சமமாக பங்கேற்று, “வளர்ச்சியடைந்த பாரதம்  2047” இலக்கை அடைய உதவுவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply